Sunday, January 2, 2011

சுடச் சுட விமர்சனம்

இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட இந்நாட்களில் அதில் வலைப்பூக்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தணிக்கை கிடையாது என்பதால் பதிவர் தன் மனதில் என்னவெல்லாம் நினைக்கிறாரோ அனைத்தையுமே பதிவிட்டுவிட முடியும். நல்ல விஷயம் தான். ஆனால் ஃபாஸ்ட் ஃபுட் காலத்தில் வாழ்வதால் இணையத்தையும் ஒரு ஃபாஸ்ட் ஃபுட் வடிவமாகவே பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டதோ என்று எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடிவதில்லை. ஒரு படம் வெளிவந்தால் மறுநாளே விமர்சனம் வந்துவிடுகிறது. ஒரு நாவல் வெளிவந்தால் இரண்டொரு நாட்களில் விமர்சனம் வந்துவிடுகிறது (அல்லது ஏதோ ஒரு நாவலைப் படித்துவிட்டு மிக எளிதாக சூடான விமர்சனத்தினை உடனே தயாரித்துவிடுகிறார்கள்). இதில் மிகப் பெரிய தவறுகள் இருப்பதாக நான் கருதவில்லை; ஆனால் அந்த படைப்பாளிக்கு நாம் கொடுக்கும் கவுரவம் இதன் மூலம் மிகவும் குறைகிறது என்பதே என் கருத்து.

எத்தகைய படைப்பும் வாசகனுக்கு எந்தவிதமான தாக்கத்தை அளித்தது என்பது மிகவும் முக்கியம். அப்படைப்பு அளிக்கும் நுட்பமான விஷயங்களையும் அவதானிக்கும் தேர்ந்த வாசிப்பை விமர்சகன் கொண்டிருக்கவேண்டும் என்பதும் மிக அவசியம். விமர்சனம் என்பது படைப்பை சுருங்கச் சொல்லுவது அல்ல, அப்படைப்பு அளித்த அனுபவங்களை சார்பின்றி பகிர்ந்து கொள்ளுவது மட்டுமே. பல நாட்களாக தம் மனதைப் பாதித்த விஷயங்களை படைப்புகளாக படைப்பாளி வாசகர் முன்பு வைக்கிறார். அதை வாசிக்கும் விமர்சகர் அது அளிக்கும் உணர்வுகளை கொஞ்ச நாட்களுக்காவது அனுபவிக்கவேண்டாமா, கலைத் தன்மையை உணர அந்த அனுபவம் மிகவும் உதவும் என்பதை உணர வேண்டாமா. எனின் மட்டுமே நல்ல விமர்சனம் உதயமாகும் என்றே நினைக்கிறேன்.

அந்த அனுபவத்திற்குப் பின் மீள்வாசிப்பும் விமர்சனம் எழுதுவதற்கு அவசியமானதாகும். விமர்சனம் மூலம் எந்த படைப்பும் கலைத் தன்மையை அடைவதில்லை, போலவே எந்த கிளாசிக்கும் வீழ்த்தப்படுவதும் இல்லை. காலம்தான் அனைத்தையுமே தீர்மானிக்கிறது. ஆனாலும் எந்தவொரு படைப்பையும் பல்வேறு முனைகளிலிருந்து படிவேறு ரசனைகொண்ட வாசகர்கள் விவாதிக்க வேண்டும், விவாதம் வெற்று அரட்டையாகவோ தத்தம் புத்திசாலித்தனத்தை நிரூபிபதாகவோ இல்லாமல் ஆழ்ந்த அனுபவமாக இருப்பின் மிகவும் நல்லது. பல்வகையான விவாதங்கள் கூடிவரும் போது ஒரு பிம்பத்தை படைப்பு அடைகிறது அதுவே விமர்சனத்தை வாசிக்கும் வாசகன் பெறவேண்டியது. சுடச்சுட விவாதிக்கும் போது மேம்போக்கான விமர்சனங்களே எழுத்தில் தங்குகின்றன.

சரி, ஒரு படமோ அல்லது இலக்கிய படைப்போ வெளியாகி-படித்து அல்லது பார்த்து-குறைந்தபட்சம் இரண்டு வாரங்களாவது கழிந்து விட்டால் விமர்சித்து என்ன பயன் என்று எண்ணலாம். உண்மையில் இதனால் வீணாவது ஒன்றுமே இல்லை. படைப்பை முழுமையாக உள்வாங்காமல் உடனடியாக விமர்சிப்பதில்தான் பாதிப்புகள் அதிகமாக இருக்கின்றன. வேண்டுமானால் தான் படித்த படைப்போ அல்லது பார்த்த படமோ நல்ல அல்லது மோசமான அனுபவத்தை தந்தது என்ற குறிப்பை மட்டும் பதிவிடலாம்.

இன்றைய தேதிக்கு தொலைத்தொடர்பு முழுமையும் ஒரே இடத்தில் தேங்கிவிட்டதால், அனைவருமே தங்கள் கருத்துக்களை பதிவிடுதல் மிகவும் அவசியம். எந்திரன் போன்ற படங்கள் தொடர்ந்த விளம்பரப் "படுத்தல்கள்" மூலம் சிறந்த படைப்பாக மக்கள் மத்தியில் நிறுவப்பட்டுவரும் இந்நாட்களில் உண்மை அதுவல்ல என்று எதிர்கால சந்ததியினருக்கு அறிவிக்கவேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. தமிழறிஞர்கள் தம் படைப்புகள் மூலமன்றி அதிகாரத்தின் மூலம் அதிகமாக தம்மை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்பதையும் பதிவிடவேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது என்பதும் உண்மையே.

எனவே விமர்சனம் உடனடியாக ஆழமின்றி அளிக்கப்படுவதை விட, நிதானமாக நிதர்சனமாகப் பதிவிடப்படலாம். தீராத வாசிப்பு மற்றும் தொடர்ந்த கருத்துப் பகிர்தல் மூலம் விரைவாகவே படைப்பை உள்வாங்கும் திறனை அனைவருமே பெறலாம். அன்று மட்டுமே உண்மையான படைப்பாளிக்கு தேர்ந்த விவாதத்தை மரியாதையாக அளிக்கமுடியும். இல்லையேல் அனைத்துமே வீண் என்பதே உண்மை

No comments:

Post a Comment