Sunday, February 6, 2011

நண்பேண்டா

 பழைய அலுவலகத்தில் இலக்கிய நணபர்கள் அதிகம் இல்லையென்றாலும் சினிமா, பாடல்கள் போன்ற கலை உணர்வுகள் கொண்ட நண்பர்கள் இருந்தனர். தொடர்ந்த விவாதங்கள் கொஞ்சமேனும் ஆரோக்கியமானதாக நடந்ததுண்டு. அதில் மோகன் என்ற நண்பர் ஞாநியின் கேணி கூட்டத்தில் கலந்து கொள்ளும் அளவுக்கு இலக்கிய ஆர்வம் கொண்டவர். சுஜாதா முதல் சுந்தர ராமசாமி வரை, மணிரத்னம் முதல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் வரை அரை அறிவோடாவது அல்லது முதிர்ச்சியற்ற மனநிலையோடாவது தொடர்ந்து விவாதிப்போம். திடீரென்று நான் கொண்ட அலுவலக மாற்றம் இலக்கிய நண்பர்கள் இல்லாமல் நரகம் போன்று காட்சியளித்தது.

முதிர்ச்சியற்ற பெண் பித்தர்களையும், இளவயது அலுவலர்களையுமே நண்பர்களாக்கிக் கொள்ளும் சூழல் அமைந்துவிட்டது. கிடைத்த ஒன்றிரெண்டு தோழிகளும் இலக்கியத்தில் எனக்கிருந்த ஆர்வத்தை மதித்தார்களே தவிர மருந்துக்கும் அதன் அருகில் கூட வரவில்லை. வெறுப்புடனையே வேலைக்கு சென்றுவரும்படி ஆனது என்னை சோர்வடையச் செய்தது. இந்நிலையில் தான் ராபர்ட்டை சந்தித்தேன். ஒழுங்கற்ற உடை, ஒல்லியான தேகம், பனைமரம் போன்ற உயரம் கொண்டவன். முதல் சந்திப்பிலேயே கலகலவென பேசிக்கொண்டிருந்தான். குழுவாகப் பேசிக்கொண்டிருந்தபோது, சுஜாதாவின் மரணம் பற்றிய பேச்சு வந்தது. அதில் நான் கலந்துகொண்ட விஷயத்தை சொன்னதும், அனைவருக்குமே சிறு ஆச்சர்யம் தோன்றியது. ராபர்ட் இன்னும் வெகுவாக என்னிடம் நெருங்கி என்னைப் பற்றி விசாரிக்கத்தொடங்கினான். ஐந்து நிமிடத்தில் அவனும் சுந்தர ராமசாமியின் தீவிர வாசகன் என்ற உண்மை தெரியவந்தது.

என்னவென்றே தெரியவில்லை அந்த நிமிடம் முதல் அலுவலகம் எனக்குப் பிடிக்கத்தொடங்கியது. பேசப் பேச அதிர்ச்சிகள் தந்துகொண்டேயிருந்தான். பேச்சு உலக இலக்கியம் வரை நீண்டது. அதில் நான் ஜீரோ என்றாலும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தேன். அதன் பிறகு பிறருடன் பேசும் ஆர்வம் குறைந்துவிட்டது. இலக்கியம், சினிமா, பாடல்கள் என தொடர்ந்து ராபர்ட்டுடன் விவாதிக்கத்தொடங்கினேன். எதையுமே ஆழத்திற்கு அப்பாற் சென்று யோசிக்கும் திறனை இயற்கையிலேயே பெற்றிருந்தான். காஃப்கா, ஆல்பெர் காம்யு என பலரையும் படித்திருக்கிறான்.

பலமுறை அவனை என் வீட்டிற்கு அழைத்தும் அவன் வந்ததேயில்லை. இந்த வாரம் நான் அழைக்காமலேயே வந்தான். இருவரும் ஆடுகளம் திரைப்படம் பார்க்கப் போவது என்று முடிவெடுத்து Sky Walk சென்றோம். மாலைக் காட்சி இல்லை, இரவும் ஒன்பது மணி காட்சிதான் இருந்தது. வேறு படம் பார்க்க இருவருக்குமே விருப்பம் இல்லை. அழகான பெண்கள் அதிகம் வலம் வந்ததால் காம்ப்ளெக்ஸை சுற்றிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்து லேண்ட்மார்க் உள்ளே நுழைந்தோம்.

பாப் இசைக்கோவைகளைப் பார்வையிடத் தொடங்கினான். அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்து பாடகர்களையுமே அவன் தெரிந்து வைத்திருந்தான். அவர்கள் தந்த அனுபவங்களை வெகு தீவிரமாக உற்சாகமாக பகிர்ந்து கொண்டிருந்தான். பிண்ணனியில் அருமையான பாடல்களை ஒலிக்கவிட்டிருந்தார்கள். பாடல்கள் பற்றிய கருத்துக்களினூடே கற்பு, காதல், தனிமை, இசை, பாப் என பல விஷயங்களை அனாயசமாக விவரித்தான். உற்சாகமான பாப் இசை தந்த அனுபவத்தை அவன் சொல்ல கேட்டபொழுது நானும் பாப் ஆல்பங்களை கவனிக்கத்தொடங்கினேன்.

அப்போது ஒலி தந்த அனுபவத்தை வீட்டிலிருந்து பின்னரவில் தனிமையாக யோசித்தபோது மயக்கமூட்டுவதாக இருந்தது. வேறு நாட்டு கலாச்சாரங்களையும், அவர்கள் வாழ்வில் தொடர்ந்து இசை ஆற்றும் பங்குகளையும் சிந்தனை செய்யவைத்தது. இரண்டு நாட்களுக்கு முன்பு பீடித்திருந்த மன குழப்பங்களுக்கு அந்த இசையும், ராபர்ட்டின் சிந்தனைகளும் சுத்தமான தீர்வை அளித்தன. கேணியும் தொடர்ந்து இசை சம்பந்தமான சந்திப்புகளை தொடர்ந்து நடத்த திட்டமிட்டு இருப்பதால் ராபர்ட்டை அதில் கலந்து கொள்ளும்படி அழைத்தேன். அவனது சம்மதம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது