Wednesday, October 21, 2009

பேராண்மை

வேலைக்காக சென்னைக்கு வந்தபின்பு எனது தீபாவளி கொண்டாட்டங்கள் பொலிவிழந்து போய்விட்டிருந்தன. ரயிலில் டிக்கெட் கிடைப்பது அரசியலில் நல்ல திட்டங்கள் போடப்பட்டு அவை நன்றாகவே செயல்படுத்தப்படுவதற்கு ஒப்பான அரிதான விஷயமாகிவிட்டபடியால் விழாக்களை தவிர்க்க ஆரம்பித்துவிட்டேன். நெரிசலுக்கு பயந்து தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகளை புறக்கணிக்க ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.

தீபாவளிக்கு படம்பார்க்க செல்வது, இளமைக்காலங்களில் மிக மிக கொண்டாட்டத்துக்கு உரிய விஷயமாக இருந்தது. திரைப்படங்களில் ஆண் நடிகர்களை பார்ப்பதை தவிர்த்து நடிகைகளை பார்க்க தொடங்கிய காலம் முதல் பட்டாசு வெடிப்பதை நாங்கள் கைவிட்டிருந்தோம். கள்ளன் போலீஸ் விளையாடும் போது கள்ளனாகவே விளையாட ஆசைப்படும் மனது, தீபாவளி துப்பாக்கி கிடைத்தவுடன், போலீஸ் ஆக மட்டுமே விளையாட ஆசைப்படுவதை ஆச்சர்யத்துடன் கவனிப்பதுண்டு. முந்தைய காலங்களில் ஊர் தியேட்டரில் கூட்டம் நிரம்பிவழியும். முந்தைய ஷோ முடியும் தருவாயில் அடுத்த ஷோவிற்கான கூட்டத்தை ஒரு பெரிய அறையில் அடைத்து, ஒரு பெரிய கயிறு கட்டி தடுப்பு அமைத்திருப்பார்கள். படம் முடிய அரைமணி நேரம் இருந்தாலும் கூட்டம் முன்டியடித்துக்கொண்டே இருக்கும். அதே வேளையில் அதற்கு அடுத்த ஷோவிற்கான டிக்கெட்டுக்காக கவுண்டர் திறந்து விடப்பட்டிருக்கும், அங்கும் அதே கூட்டம் தான். அனால் இந்தமுறை படம் ஆரம்பிப்பதற்கு 10 நிமிடம் முன்னர் தான் தியேட்டருக்கு சென்றபோதும் மிக எளிதாக பேராண்மை படத்திற்கு டிக்கெட் கிடைத்துவிட்டது. முன்பு அடுத்த ஷோவிற்கு கூட்டத்தை அடுத்துவைக்க பயன்பட்ட இடத்தில் பர்னிச்சர் பொருட்களை போட்டு நிரப்பி வைத்திருந்தார்கள்.

என்னிக்கையட்ட்ற கேபிள் சேனல்கள் வந்துவிட்ட பின்பு கிராமபுரங்களில் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பதை வெகுவாக குறைத்துவிட்டது தெளிவாக தெரிந்தது. ஷங்கர் போன்ற இயக்குனர்களுக்கு தெரிந்த வியாபார தந்திரங்களை ஜனநாதன் போன்ற இயக்குனர்களும் கற்றுக்கொள்வது அவசியமானதே ஆகும். அதாவது, மிக பிரம்மாண்டமாக விளம்பரம் செய்வது,
அதிக திரை அரங்குகளில் ரிலீஸ் செய்வது.

பேராண்மை படத்தின் ஆரம்பக்கட்ட காட்சிகளை பார்த்தபோது, இதுவும் வழக்கமான சினிமாவோ என்று கொஞ்சம் பயந்து தான் போனோம், ஆனால் அடுத்தடுத்த காட்சிகள் எங்கள் பயத்தை வெகுவாக குறைத்துவிட்டன.
ஜனநாதனின் அனைத்து படங்களிலுமே திரைக்கதையில் ஒரு கச்சிதம்
இருந்ததில்லை, அதேபோல்தான் இந்த படமும் என்றாலும், எடுக்கப்பட்ட விதம், கடினமான கதைக்களம், நேர்த்தியான ஒளிஎப்பதிவு, அங்கங்கே பிசிறு தட்டினாலும் தெளிவான இசை என முந்தைய படங்களின் உழைப்பு, இதிலும் குறைவில்லாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆதிதிராவிடர் சமொகத்திலிருந்து, கல்வியின் மூலம் உயர்ந்து NCC அதிகாரியாக பனி செய்யும் ஜெயம் ரவியும், NCC பயிற்சிபெற அவரிடம் வரும் ஐந்து கல்லூரி மாணவிகளும் பல்வேறு மோதல்களுக்கு பின்பு நாட்டுப்பற்று என்ற ஒற்றை வார்த்தையில் ஓன்று சேர்ந்து, ராக்கெட் தளத்தை தகர்ப்பதற்காக வரும் வெளிநாட்டு சக்திகளை முறியடிப்பதே படத்தின் கதை.

இன்றைய இளைஞர்களின் உலகத்தில் புத்திசாலித்தனமும், கேளிக்கைகளும், செல்பேசிகளும், ஆபாரமான அறிவாற்றலும் குவிந்து கிடந்தாலும், அரசியல் போருலாதாரத்திர்க்கோ, அரசியலுக்கோ, சாதி பற்றிய பார்வைக்கோ இடமில்லாத குறையை ஆதங்கத்துடன் சுட்டிக்காட்டியபடியே
ஆரம்பக்கட்ட காட்சிகள் நகருகின்றன.

ஈ படத்தில் ஜீவா காட்டிய ஒரிஜினாலிட்டியை, இந்த படத்தில் இயக்குனர் ஜெயம் ரவியிடம் கொண்டுவரவில்லை எனினும், சிறப்பாக கல்வி கற்று சில உயரங்களை அடைந்தாலும், சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அடையும் அவமானங்களை, சிறப்பாக திரையில் கொண்டுவந்துள்ளது பாராட்டுக்குரியது.

இயற்கை விவசாயம், அரசியல் பொருளாதாரம், மண்ணை பாழாக்கும் நச்சு
செடிகளை அழித்தல் என கதையில் பல வாசல்கள் இருந்தாலும், சில மணித்துளிகளுக்கு பின்னால் படம் ஒரே கதையில் சீராக பயணிக்கிறது.

அடர்ந்த காட்டில் பயிற்சி அளிப்பதற்காக ஐந்து மாணவிகளை கூட்டிச்செல்லும் காட்சியில், காட்டை பற்றிய ரவியின் விவரணைகளும், காட்டின் பிரம்மாண்டமும், சிறு பறவைகளின் ஒலியும், சிற்றோடைகளும், ஏரிகளும் ரம்மியமான இசையுடன் அழகாய் படமாக்கப்பட்டிருக்கின்றன.

ஐந்து மாணவிகளையும் ஜெயம் ரவி கற்பழித்து கொன்றிருக்கலாம் என்று சந்தேகப்படும் மேலதிகாரியான பொன்வண்ணன், ரவியை தேடி அவரது குடியிருப்புக்குள் நுழையும் போது, காவல்துறை அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் நடைபெறும் சண்டைக்காட்சியை சதீஷ் குமாரின்
கேமெரா உக்கிரமாக பதிவு செய்துள்ளது.

பொன்வனணனிடம் வெளிநாட்டு கூலிப்படையினர் காட்டிற்குள் நுழைந்து விட்டதை தெரிவிப்பதற்காக சரண்யா மட்டும் தனியே காட்டை விட்டு திரும்பும் காட்சிகளிலும், வசுந்தரா யானையிடம் மாட்டிக்கொள்ளும் காட்சிகளிலும் மிரட்டியிருக்கிறார்கள்.

காட்டை பற்றிய பல்வேறு ஆங்கிலப்படங்களை பார்த்திருப்பவர்களுக்கு, இந்த படம் பெரிய ஆச்சர்யங்கள் எதையும் தருவதில்லை. ரவி அன் கோ பயணம் செய்யும் காட்டுப்பாதையில், ஒரு யானையை tதவிர எந்த காட்டு விலங்கும தென்படாதது வினோதமாக இருக்கிறது. ராக்கெட் ஏவுதளத்தை ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து எளிதாக தாக்கிவிடலாம் எனும்போது, அந்த இடத்திற்கு பாதுகாப்புக்கு ஒரு போலீஸ் கூட நிருத்தப்படாததற்கு காரணம் தெரியவில்லை. 16 பேர் கொண்ட கூலிப்படையினரை வெறும் ஐந்து பேர் சமாளிக்கவேண்டிய நிலையில், அவர்கள் கன்னி வெடிகளை புதைப்பதும், கூலிப்படையினரின் உபகரணங்களை தூக்குவதும் என சில காட்சிகள் அமெச்சூர்தனமாக உள்ளன. படத்தில் சாகசங்கள் கொஞ்சம் குறைவே.

உலகத்தில் எந்த இடத்திலும் கன்னி வெடிகள் புதைக்க படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், நம் தாய் நாட்டை காப்பாற்ற கன்னி வெடிகளை புதைப்பதில் தவறில்லை என்பது போன்ற ரவியின் வசனங்கள் பளீச். இருந்தாலும், இந்தியா வல்லரசாக விரும்பும் இயக்குனர்கள் இன்னும்
ஆழமாக சிந்தித்து காட்சிகளை மக்களுக்கு அளித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

கிடைக்கிற கேப்பில் ஊரை ஏமாற்றி விருதுகளை வாங்கிக்கொள்ளும் அதிகாரியாக பொன்வண்ணன் சிறப்பாக செய்துள்ளார். முகத்தில் அறையும் நிஜம் காட்சியகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த படத்திற்ற்கு தேவையற்றவை இரண்டு; ஓன்று, வடிவேல், மற்றொன்று பாடல்கள்; இரண்டுமே சரியில்லை.

ஒரு படம் வணிகத்துக்காக மட்டுமே எடுக்கப்பட்டிருக்கிறதா, இல்லை சோதனை முயற்சிகளுடன் நேர்மையாக தரம் மிகுந்ததாக எடுக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டுபிடிப்ப்ப்தற்கு கொஞ்சம் சிரத்தை எடுத்தால் பார்வையாளனுக்கு கடினமானது அல்ல. இந்த படம் வியாபாரத்திற்காக மட்டுமே எடுக்கப்படவில்லை என்பது தெளிவே.

தமிழ் சினிமாவை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லும் படைப்பாளிகளில் ஜனநாதனும் ஒருவர் என்பது மற்றொருமுறை தெளிவாக நிரூபிக்கப்பட்டிருப்பது மறுப்பதற்கில்லை.

தேவையற்ற பாடல்கள், தேவையற்ற ஆரம்பக்கட்ட சில காட்சிகள், வடிவேலு, ஆடை வடிவமைப்பில் தேவையில்லாத கவர்ச்சி, படத்திற்கு கொஞ்சமும் சம்மந்தமற்ற இரட்டை அர்த்த வசனங்கள் (கொஞ்சம்தான்), என சில காட்சிகள் மட்டும் நீக்கப்பட்டிருந்தால் இன்னும் வெகுவாக இந்த படத்தை நாம் ரசித்திருக்க முடியும். இருந்தாலும், வித்தியாசமான கதைக்களம், திறமையான இயக்கம், வோளிப்பதிவு, சண்டைக்காட்சிகள் என பல உழைப்புகளுக்காக இந்த படத்தை ஒருமுறையேனும் பார்க்கவேண்டியது அவசியமானது.

Friday, September 25, 2009

Honey I Blew Up the Kid

சிறு குழந்தைகள் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பவர்கள், அவர்களது உலகம் கேள்விகளால் ஆனது. சிறு பிராயத்தில் தோன்றும் கேள்விகள் முடிவற்றவை, அவை தம்மை நோக்கி கவர்ந்திளுக்கக்கூடியவை. மாலையில் கவியும் இருளும், காலையில் தோன்றும் பனியும், நடு இரவின் விசித்திரமான கனவும் என குழந்தைப்பருவத்தில் புதிதாக காணும் காட்சிகள் யாவும் குழந்தைகளை அலைக்கழிக்கின்றன. பெரும்பாலும் பிறந்த குழந்தைகள் இரவில் தூங்குவதில்லை. நிலவொளியின் சாட்சியாய் அதுவரை தன்னை காத்துவந்த தேவதைகளுக்கு பிரியாவிடை கொடுக்கும் சோகத்தை தாங்கமுடியாமல்தான் இரவில் குழந்தைகள் அழுகின்றனரோ-தெரியவில்லை-ஆனால் தேவதைகளின் உறவை துண்டித்து பூமிக்கு வரும் குழந்தைக்கு பூமியில் நமது பங்களிப்பு என்ன?. பட்டு போன்ற மிருதுவான குழந்தைக்கு உலகத்தோடு தன்னை நெருக்கிக்கொள்ளும் வொவ்வொரு தருணமும், அதன் குணாதிசயங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. அந்த குழந்தைக்கு நாம் எந்தமாதிரியான உலகத்தை கான்பிக்கப்போகிறோம் என்பது மிகவும் முக்கியமானதாகும்.


என் நெருங்கிய நண்பனான குகனுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்று அவன் போனில் சொன்னான். முதல் குழந்தை என்பதால் அவனிடையே உண்டான கலவரத்துக்கு என் அருகாமை அவனுக்கு தேவையாக இருந்த நேரத்தில், நான் ஊருக்கு சென்றுவிட்டபடியினால், அவனுடன் இருக்க முடியவில்லை. அந்த குற்ற உணர்ச்சியால், அவனது குழந்தையை முதன் முதலில் தூக்கி என்னிடம் அவன் தந்தபோது, இலகுவான அந்த குழந்தை பெரும் பாரமாக என் கைகளில் இருந்தது. நான் அவளுக்கு முதலில் சொன்னது இந்த பூமிக்கான வரவேற்ப்பு இல்லை, என் மனதாலான மன்னிப்புதான். ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்ததுதான். அவர்களுக்கு பூமியில் நமது ஆரம்பக்கட்ட வழிகாட்டல்கள் என்ன என்பது, பெரும் அக்கறையோடு கட்டமைக்கப்படவேண்டியதாகும். அவளுக்கான கல்வி, விளையாட்டு, ரசனை, சமுகம், அறிவியல், புத்தகம் என ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யப்படவேண்டியவை.


ஒரு குழந்தையின் ஆரம்பக்கட்ட குணாதிசயங்களை தீர்மானிப்பதில், தொலைகாட்சி, பக்கத்து வீட்டு குழந்தைகள், நம் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், தாய் தந்தையரின் நடவடிக்கைகள் என பல காரணிகள் உள்ளன. இன்று நாம் காணும் பல குழந்தைகள் தங்கள் சிறு பிராயத்தை தொலைகாட்சி முன்பே கழிக்கின்றனர், அதில் அவர்களுக்கு வக்கிர உணர்ச்சிகளும், ஆபாச நடனங்களும், தமிழின் ஆக மோசமான படங்களும் என பெரும்பாலும் ஒரு சில விதிவிலக்குகளை தவிர்த்து குப்பைகளே காணக்கிடைக்கின்றன. அவர்களுக்கு தாம் படிக்கவும் பார்க்கவும் தரப்படவேண்டியவை எவை என்பதில் நாம் ஆழ்ந்த கவனம் கொள்ள வேண்டியது இன்றியமையாதது. தமிழில் குழந்தைகளுக்கான சினிமா எவை என பார்க்கும்போது அஞ்சலி, பசங்க என ஒன்றிரண்டைத்தவிர நமக்கு காணக்கிடைப்பவை அனைத்தும் படு மோசமனவையே. ஒரு குழந்தையை சினிமாவில் நடிக்கவைக்கும்போது, அதன் குழந்தைத்தனத்தை ஒரு துளிகூட திரையில் கொண்டுவராமல், அவர்களை பக்கம் பக்கமாக மேதாவித்தனமான வசனங்களை பேசி நடிக்கவைக்கும் இயக்குனர்களை எத்தனைமுறை வேண்டுமானாலும் உயிர்த்தேழவைத்து உயிர்த்தேழவைத்து சுட்டு கொன்றுவிடலாம். இங்கே பெரியவர்களுக்குப் என்று எடுக்கப்படும் படங்களும் பெரியவர்களுக்கான படங்கள் அல்ல, அவை ஒரு விதமான childish படங்கலேயாகும். இந்தவிஷயத்தில் வெளிநாட்டு திரைப்படங்கள் பல உன்னதமானவை.


இந்தவாரம் தொலைக்காட்சியில், Honey I Blew Up the Kid என்ற Randal Kleiser-இன படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு சனிக்கிழமையில் விஞ்ஞானியான Szalinski தன் பிள்ளைகள் Nick மற்றும் Adam இருவரையும் தனது ஆய்வுக்கூடத்துக்கு அழைத்துசெல்கிறார். Big Bunny என்ற பொம்மையை வைத்து அதன் மீது மின்சார ஊதா கதிர்களை பாய்ச்சி ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார். அப்போது Adam, Szalinski மற்றும் Nick இருவருக்கும் தெரியாமல் Big Bunny-யை எடுக்கசெல்லும் போது அவன் மீது அந்த கதிர்கள் தாக்கிவிடுகின்றன, அவன் சில அடிகள் தூக்கி எரியப்படுகிறான். வீட்டுக்கு திரும்பியவுடன், Szalinski, Adam-மை தூக்கி அவனுக்கு உணவளிப்பதற்காக உயரமான சேரில் வைத்துவிட்டு Nick-இன அறைக்கு செல்கிறார், அங்கே Nick இன்று என்ன படம் பார்க்க செல்லலாம் என்று தனது கம்ப்யூட்டர்-ரில் தேடிக்கொண்டிருக்கிறான். மின்கதிர்கள் தன்மீது படும்போதெல்லாம் வளரும் ஆற்றல் பெற்றதின் காரணமாக, அந்த அறையில் உள்ள சில கதிர்களின் தாக்கத்திர்கேர்ப்ப Adam கொஞ்சம் அதிகமாக வளர்ச்சியும் எடையும் பெற்றுவிடுகிறான். சிறிது நேரத்தில் அவனது எடையை அதிகமாக உணரும் Szalinski, தன் மகளுக்கு துணையாக சென்றுள்ள தன் மனைவி வரும்முன், அவனை சரிசெய்துவிடவேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்குள் அவரது மனைவி வந்துவிடுகிறாள். அவர்கள் அனைவரும் நிலைமையை புரிந்து கொள்வதற்குள், Adam ஒரு பெரிய ஆளைவிட பருமனும் உயரமும் கொண்டவனாக மாறிவிடுகிறான். அதன் பின்பு அவன் செய்யும் அட்டகாசங்கள் தான் இந்த படத்தின் கதை. இந்த படம் Children of Heaven போன்ற கலையுடன் கூடிய கவித்துவமான இல்லை, ஆனால் இது குழந்தைகளை குதூகலப்படுத்தக்கூடியது. கதைசொல்லல் முறையில் நேர்மையானது. Los Vegas நகருக்குள் 112 அடி குழந்தையாக, தனது அண்ணனையும் அவனை கவனித்துக்கொள்ள வந்த பெண்ணையும் தன் சட்டைக்குள் தூக்கிபோட்டுக்கொண்டு செய்யும் சேட்டைகளும், குழந்தைத்தனம் மாறாமல் அவன் செய்யும் குறும்புகளும் மிகவும் ரசனையாக எடுக்கப்பட்டுள்ளது.


அவன் அத்தனை அட்டகாசங்கள் செய்தாலும், அவை அனைத்தும் ஒரு சுட்டிகுழந்தையின் சாயலிலேயே படம் பிடித்திருப்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். Adam-மை மயக்கமடையவைப்பதர்க்காக துப்பாக்கியின் மூலம் மயக்கமருந்துடன் சுடும்போது, அவன் வலி தாங்கமுடியாமல் பெரிதாக அழுகிறான். அதைக்காணும் Log Vegas நகர மக்கள் ஒவ்வொருவரின் கண்களும் கலங்கிவிடுகின்றன. ஒரு பெரிய டேங்கர் லாரிக்குள் அவனை மட்டும் அடைத்து வைத்து கொண்டுசெல்லும்போகும் காட்சியில், அவனை க்காட்டாமல் அவன் அழுகையை மட்டும் பின்னணி இசையில் ஒலிக்கச்செய்து அவனது பெரிய உருவத்தை பார்வையாளர்களை உணரசெய்திருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். 112 அடி உயரமான Adam அவனது காலடியில் ஓடும் கார்களை ஏதோ விளையாட்டு என்று நினைத்து அவற்றை துரத்தும்போது, அவன் பாக்கெட்டில் இருக்கும் Nick-யும், அவனை கவனித்துக்கொள்ள வந்த பென்னனான Mandy-யும் எங்கே கீழே விழுந்துவிடுவோமோ என்று பதறும் காட்சிகள் பிரம்மிப்பூட்டுபவை.


சிறுவர்களுக்கான சிறந்த Science Fiction படமான இது பெரியவர்களையும் கவரக்கூடியது. ஏராளமான விருதுகளை அள்ளிக்குவித்த இந்த திரைப்படம் 1992-இல் வெளியானது. இது 1989-இல் வெளியான Honey, I Shrunk the Kids என்ற படத்தின் தொடர்ச்சியாகும். இதன் இயக்குனர் Randal Kleiser ஆவார்.


இந்தப்படத்தை பார்க்கும் போது, Visual Effects-இல அவர்கள் 1990 களிலேயே சாதனை படைத்திருப்பதை உணரமுடிகிறது. நம்மிடையே இதுபோல் பிரும்மாண்டமான வணிகம் இல்லைதான், ஆனால் குழந்தைகள் மீதான முழு அக்கறையோடு குறைந்த பட்ஜெட்டிலேயே படங்கள் எடுக்க முடியும். வசூலை மட்டுமே இலக்காக கொள்ளாமல், சினிமா மீது தீராத அக்கறையுடன் உழைக்கும் படைப்பாளிகள் வரவேண்டும்.


குழந்தை வளர்ப்பில் பெற்றோர் ஆற்றும் பங்கில் நல்ல புத்தகங்களையும், தரமான சினிமாவையும் அறிமுகப்படுத்துவது இன்றியமையாதவை. தேர்ந்த மொழியில் சின்னஞ்சிறு வாக்கியங்களில் எழுதப்பட்ட ஜெயமோகனின் பனி மனிதன் என்ற குழந்தைகளுக்கான நாவல் அமோகமான விற்பனையை கொடுக்கவில்லை என்று அவர் தன்னுடைய Website-ல் எழுதியிருந்ததை படித்தபோது வருத்தமாக இருந்தது. Horry Potter-க்கு கொஞ்சமும் சளைக்காத பல படைப்புகள் தமிழிலேயே எழுதப்பட்டுள்ளன. அம்புலிமாமா கதைகளில் உள்ள மாயாஜாலமும், பீர்பால் கதைகளில் உள்ள புத்திசாலித்தனமும், தெனாலிராமன் கதைகளில் உள்ள நகைச்சுவையும் எந்த ஆங்கில குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு சளைத்தவை அல்ல. அவற்றை படமாக எடுத்தால் தரமான ஆயிரம் படங்களேனும் நாம் குழந்தைகளுக்காக உருவாக்க முடியும். நம்முடைய புராணக்கதைகளும், சங்க இலக்கியங்களும், புறநானுற்று பாடல்களும் என தமிழின் தொன்மையான இலக்கியங்கள் அனைத்தும் சினிமாவுக்கு மீண்டும் மீண்டும் மீள்வடிவம் செய்யப்படவேண்டிய கட்டாயங்கள் நம்மிடையே உள்ளன. திருக்குறளை வைத்துக்கொண்டே கேனத்தனமாக காமெடி என்ற பெயரில் அசிங்கப்படுத்தும் நடிகர்களையும் இயக்குனர்களையும் வைத்துள்ள நாம் கடக்கவேண்டிய தூரம் சினிமாவில் மட்டுமல்ல சகல துறைகளிலும் மிகவும் நீளம். மேற்க்கத்திய நாடுகளின் பல கலாச்சாரங்களை கேள்வியே கேட்காமல் அவை எவ்வளவு மோசமானவையாக இருந்தாலும் எடுத்துக்கொண்டு, ஒரு ஜெராக்ஸ் காபி போல் வாழும் நாம் , இலக்கியம், ரசனை, ஆய்வு, தனிமனித சுதந்திரம், சினிமா போன்ற நல்ல விஷயங்களில் அவர்களை பின்பற்றுவது எப்போது?



Saturday, September 19, 2009

சென்னையில் ஒரு மழைக்காலம்

வெயிலை உண்டு செரித்து வாழ்பவர்களின் பூமியில் பிறந்த என் போன்றோருக்கு வெயில் எதிரியல்ல. எங்கள் ஊரில் மிகவும் குறைவாகவே உள்ள வயல்வேளிகளைத்தாண்டி அடுத்த கிராமத்திற்கான பயணத்தில்
பெரும்பாலும் கடக்கவேண்டியவை பொட்டல் காடுகள்தான். செங்கல் சூளைகளும், தனியான மாடன் சிலைகளும், வடலிகளும், உயர்ந்த பனை மரங்களும் என ஒரு ஊரைத்தாண்டி இன்னொரு ஊருக்கு
போகும்போது பயனவேளிகளில் நாம் காண்பவை அனைத்தும் வெயிலைக்குடித்து தங்களை முருக்கேற்றியவைதாம். என் விடுமுறை நாட்களை முழுதும் போட்டல்காடுகளை சுற்றி அலைவதிலயே
பெரும்பாலும் கழித்திருக்கிறேன். எங்கள் ஊரைக்கடந்து செல்லும் மேகங்களில் ஒரு வனப்பு இருந்ததில்லை. மழையின் அறிகுறிகொண்ட கருப்பு மேகங்கள் எங்கள் ஊரில் மலையாய் பொழியாமல் கடந்து செல்கையில் மனதில் தோன்றும் ஏமாற்றத்தை பலமுறை அனுபவித்தவர்கள் எங்கள் ஊர் விவசாயிகள். வெயிலை பருந்துடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட எஸ். ராமகிருஷ்ணனின் பலவரிகள் என்னை அலைக்கழித்துக்கொண்டே இருக்கின்றன. வேப்பமரங்களை அதிக அளவில் கொண்டது எங்கள் ஊர். சிறு பிராயத்தில் வேப்பமுத்து பொறுக்க செல்வதில் அலாதி இன்பம் இருந்தது. வேப்பமுத்துக்களை போருக்கசெல்வதர்க்காக நாங்கள் தயாராகும் முறை ஒரு சாகசப்பயணம் போன்றது.



ஒருமுறை எங்கள் பள்ளியிலிருந்து ஒருநாள் சுற்றுலாவாக இரண்டு ஊர்களுக்கு கூட்டிச்சென்றார்கள். சுற்றுலா என்றதும் ஆம்னி பஸ்ஸோ அல்லது வேனோ உங்கள் ஞாபகத்துக்கு வந்தால் நான் பொறுப்பல்ல. இதில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால், எங்கள் ஊரிலிருந்து இந்த ஊர்களுக்கிடையேயான மொத்த தூரமே 6 k.m. தான். அப்போதைய அரசாங்க திட்டமான அனைத்து பள்ளிமாணவர்களுக்கும் இலவச செருப்பு நடைமுறையில் இருந்தாலும், அவ்வாறு கிடைத்த செருப்புகள் என்றுமே ஒரு
வாரத்திற்குமேல் தாக்குப்பிடித்தது இல்லை என்பதால், எம் பள்ளிமாணவர்கள் யாருமே செருப்பு அணிந்ததில்லை. ஒரு வரிசைக்கு இரண்டுபேர் என மொத்தமுள்ள நூறு மாணவர்களையும் இரண்டு இரண்டுபேராக கைகோர்த்தபடியே அந்த இரண்டு ஊர்களையும் வெறுங்காலோடு நடக்கவைத்த
சிவனுபாண்டி சாரை இன்று நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கும். இப்போது எங்கள் ஊரின் ஒரே விளையாட்டான கிரிக்கெட்டை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை, நாங்கள் விளையாடும் விளையாட்டுகள் தொடர்ந்து மாறியபடியே இருக்கும். வேப்பமுத்து போருக்கசெல்வது கொடைகாலங்களில்தான் . கையில் பெரிய பையோடு கிளம்பும் எங்கள் சாகச பயணத்தில் பொதுவான திட்டம் எதுவும் இருக்காது. கல்குவாரியும், புழுதியும், நாவல் மரங்களும், நீர்மண்டிய கிணறுகளும், ஓணான்களும், கீரிகளும்
எங்களுடன் தீரா உறவு கொண்டிருந்தன. தண்ணியே கிடைக்காமல் சகட்டுமேனிக்கு வெயிலில் சுற்றிய கால்கள் பலமுறை தடம்பிரண்டு விழுந்திருக்கிறோம். நெடுந்தூர பயண களைப்பில் எங்கோ கிடைக்கும் கொஞ்ச பருகிய எங்கள் நா தாகம் தணிந்தாலும், வெறும் வயிற்றில் குடிப்பட்ட நீர் எங்களை மயக்கமுரசெய்திருக்கிறது. நவாப்பழம் பறிக்க மரத்தின் உச்சிக்கே செல்லவேண்டும் என்பது என் சிறுவயது கனவாக இருந்தது. கனிந்து மணலில் வீழ்ந்துகிடந்த நாவல் பழத்துக்கு இணையான ருசியை நான் எந்த பழத்தியிலும் உணர்ந்ததில்லை. எங்கள் ஊர் வெயிலின் மீது எனக்கு தீராத காதல் இருந்தது. காற்றுக்காலம் என்னை ஒருபோதும் கவர்ந்தது இல்லை.


எங்கள் ஊர் மக்கள் வெயிலை உண்டு வளர்ந்தவர்கள். முறுக்கேறிய கைகளும், சிவப்பேறிய கண்களும், கறுத்த தோலும், பரட்டை தலையும், வேற்று உடம்பும், ஒடுங்கிய வயிறும் கொண்டவர்கள். தங்கள் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்பதில் தீராத ஆர்வம் கொண்டிருந்தார்கள். என் அப்பா தலைமுறைகளில்
படித்தவர்கள் யாருமே இல்லை. ஐந்தாம் வகுப்பை முடித்த எங்களை, மேல்நிலைப்பள்ளியில் சேர்ப்பதர்க்காக எங்கள் தகப்பன்மார்கள் பருவமழை பெய்து செழித்திருந்த வயல்வெளிகளை கடந்து பொட்டல் காடுகளின் வழியே கூட்டிச்சென்ற சித்திரம் மனதில் தோன்றி மறைகிறது. அனைவரின் மனதிலுள்ளும் குடிகொண்டிருந்த மகன்களின் படிப்புமீதான ஏக்கத்தினை சூரியன் ஒரு மௌன சாட்சியாக தகதகப்புடன் பார்த்துக்கொண்டிருந்தது.


கல்லூரி படிப்பை முடித்து சென்னை வந்துவிட்ட இந்த ஐந்து ஆண்டுகளில், சென்னையின் வெயிலோ அல்லது மழையோ என்னை என்றுமே கவர்ந்ததில்லை. எங்கள் ஊர் மழை வந்து வேரித்தபின் பெரும் அழகு,
இயற்கையிலே அழகான சீமாட்டி தலைக்கு குளித்தபின் தோன்றும் பேரழகை ஒத்தது. ஆனால் சென்னையில் மழை என்றால் தேங்கிநிற்கும் சாக்கடைகளும், வெயிலென்றால் வெயிலோடுசேர்ந்த கனரக வாகனங்களில் புகையும் தொடர்ந்து என்னை கலவரப்படுத்திக்கொண்டே இருக்கும். இங்கு வசந்தகாலம்தான் எனக்கு உகந்ததைப்படுகிறது.


அனால் சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் இரவில் பெய்த மழை வித்தியாசமானது. எங்கள் அலுவலகம் அமைந்திருக்கும் கிண்டியில் பலத்த மழை பெய்துகொண்டிருந்த வேளையில், அறை aமைந்திருக்கும் சூளைமேடு பகுதியில் ஒரு சொட்டுகூட மழை இல்லை. மழையில் நனைந்தபடி
இதுவரை பைக் ஒட்டிய அனுபவம் இல்லாமையால் அன்றைய மழையை ரசித்தபடியே நனைந்துகொண்டே பைக்கில் வந்த எனக்கு உதயம் தியேட்டர் பகுதி காய்ந்து கிடந்ததை பார்த்தபோது ஆச்சர்யமாய் இருந்தது. முழுதும் நனைந்து உடையெல்லாம் ஈரமாக உதயம் சிக்னலில் நின்றபோது சிக்னலை
கடந்த பாதசாரிகள் என்னை ஆச்சர்யமாக பார்த்துக்கொண்டே சென்றார்கள். என்னைப்போலவே நனைய ஆசைப்பட்டது மழையில் நனைந்துகொண்டே வந்த இன்னொருவர் என்னை பார்த்தும் இலேசாக சிரித்துக்கொண்டார். வெக்கை ஊறிய அப்பகுதியில் இருந்து பின்னோக்கி சென்றாள் மீண்டும் மழையில் நனையலாம் என்று நினைத்தபோது மீண்டும் மழையில் நனைய ஆசையாயிருந்தது .


அன்றும் நாங்கள் என்றாவது மழை வரும் நனையலாம் என்று காத்துக்கொண்டிருந்த நாட்களில் அதே வேளையில், ஏதாவது ஒரு பக்கத்து ஊரில் மழை பெயதுகொண்டிருந்திருக்கும்தானே. அன்றே தெரிந்திருந்தால் அது எவ்வளவு தொலைவான ஊரென்றாலும் நடந்தே சென்று நனைந்திருக்க மாட்டோமா?. ஒவ்வொரு கேள்விகளும் சிறு வயதில் எங்களை அலைக்கழித்தன, ஆனால் இப்போது எந்த ஊரில் மழை பெய்துகொண்டிருக்கும் என்ற கேள்வியை அந்த வெக்கை நாட்களிலும் யாருமே என்னிடம் கேட்டதில்லை, நானும் நினைத்ததில்லை.