Thursday, November 25, 2010

கேணி-மனோகர் தேவதாஸ்

முந்தைய நாளின் இரவு வேலையின் காரணமாக காலையில் கண்விழித்தபோது மணி 11யைக் கடந்து 12ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. "Volunteers needed urgently to clean Keni Garden" என்று பதிவர் நண்பர் கிருஷ்ணபிரபு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.  சென்னையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஞாநி வீட்டின் கேணி மிகவும் முக்கியமானதாகும்.  உற்சாகமாக புறப்படத் தயாரானேன்.  குளித்துமுடித்துவிட்டு வந்து பார்த்தால் கிருஷ்ணபிரபு மறுபடியும் தொலைபேசியில் அழைத்து அனைத்து வேலைகளையும் செய்து முடித்து விட்டார்கள்; மெதுவாகவே வா என்றார்.  மிகுந்த ஏமாற்றமாக போய்விட்டது; பின்பு மெதுவாக கிளம்பி 3:30 மணிவாக்கில் கேணியை அடைந்தேன்.  கேணி வளாகம் மிகவும் சுத்தமாக இருந்தது.

 

நான், பிரபு, கேணி நண்பர்கள் இருவர், மற்றும் மைனா பட துணை நடிகர் என ஐவர் மட்டும் பேசிக்கொண்டிருந்தோம்.  கிருஷ்ணபிரபுவின் பேச்சு மிகவும் சுவாரசியமாக இருந்தது.  வீட்டின் உள்ளே மனோகர் தேவதாஸ் வரைந்த ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன, அனைவரும் கண்டிப்பாக காணவேண்டும், உள்ளே வாருங்கள் என்று ஞாநி அழைத்தார்.  இயற்கைகாட்சிகள், மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கோபுரங்கள், என பல்வேறு வகையான ஓவியங்கள் ப்ரேம் செய்யப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தன.  அவற்றில் பெரும்பாலானவை கறுப்பு வெள்ளை ஓவியங்களேயாயினும் பார்வையாளனை கவர்ந்திளுக்கும் தன்மை கொண்டவை.  மிக மிக நுட்பமான அவ்வோவியங்களை அதீதமான கலைத்திறனும் மிகுந்த ஆர்வமும் இல்லாமல் ஓவியன் வரைவது சாத்தியமே இல்லை எனலாம்.  ஓவியத்தின் கோடுகளை-பெரிய கோடுகளை விட சிறியவை எண்ணிக்கையில் மிக அதிகம்-கூர்ந்து பார்த்தபடியே இருந்தேன், மனம் தானாகவே அவற்றை எண்ணிக்கொண்டிருந்தது.  ஏதோ ஒரு புள்ளியில் ஒருவிதமான அழுத்தம் பீடிக்க ஓவியங்களிலிருந்து பார்வையை விலக்கியபோது அது தந்த மனப்பதிவு அசாத்தியமானதாக இருந்தது.   அபாரமான ஓவியங்கள் அவை; எவ்வளவு உன்னிப்பாக கவனித்தாலும் ஓவியங்களை முழுமையாக உள்வாங்கவே முடியவில்லை; அதன் பிரும்மாண்டத்தை உள்வாங்குவது அத்தனை எளிதான விஷயமாகவும் இருக்கவில்லை.  மேலும் மனோகர் எழுதிய அனைத்து புத்தகங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.  அதன்பின் மீண்டும் கேணி வளாகத்தை அடைந்தோம்.  அழியாச்சுடர்கள் வலைப்பதிவர் ராம் வந்திருந்தார், நான் விரும்பி வாசிக்கும் வலைப்பதிவர் என்பதால் என்னுடைய வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்தேன்.  வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்துவது பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.  கேணி ஆரம்பமானது.




இந்தமாதம் கேணி கூட்டத்தின் சிறப்பு விருந்தினர் மனோகர் தேவதாஸ் என்று அறிவிக்கப்பட்டபோது, எனக்குள் எவ்வித எதிபார்ப்பும் ஏற்படவில்லை.  ஊருக்குச் செல்லும் நாட்களைத் தவிர கேணி நாட்களில் சென்னையில் இருந்தால், கண்டிப்பாக கலந்து கொள்வது வழக்கம் என்பதால், வழக்கத்தை மாற்றிக்கொள்ள வேன்டாமே என்ற காரணத்தினாலேயே கலந்துகொண்டேன்.  சரியாக 4 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது.  ஞாநியின் உரை வழக்கம்போலவே சுருக்கமானதாகவும் சுவாரசியமானதாகவும் இருந்தது.  ஞாநி மனோவை (மனோஹர் தேவதாஸ் இனி மனோ) வாசகர்களிடையே அறிமுகப்படுத்தி வைத்தார்.  அவரது பேச்சின் பொதுவான சாரம் கீழே:

முதலில் அடுத்தடுத்த மூன்று மாதஙளுக்குக் கேணியில் கலந்துகொள்ளப்போகும் ஆளுமைகளை அறிவித்தார்.  நான் (ஞாநி) சமீப காலஙளில் உடல் நிலை மற்றும் சமூக நிலை பற்றிய மிகுந்த மனச்சோர்வில் இருந்தேன்.  மனம் சொல்லுவதைக் கேட்கும் உடல் வாய்க்கவில்லையே என்ற வருத்தம் மிகுந்த மனச்சோர்வை அளித்தது.  நாம் எழுதுவதன் பயன் மற்றும் அதன் விழைவுகள் பற்றி மனம் அவ நம்பிக்கை கொண்டிருந்ததது.  மனோவை எனக்கு முப்பது வருடங்களாகத் தெரியும்.  மேலும் அவரது ஓவியஙளைத் தொடர்ந்து கவனித்து வருபவன் நான் என்றாலும் அவருடன் நெருங்கிப் பழகியதில்லை.  அவரது ஓவியங்கள் வெகுஜன இதழ்களில் அதிகமாக வருவதில்லை என்றாலும், சிறுபத்திரிக்கை உலகிலும், சென்னைக்கென்றே (ஒரு பத்திரிக்கை என்றால் எப்படி இருக்கவேன்டுமோ அப்படி) நடத்தப்பட்ட சென்னை வீக்லி போன்ற பத்திரிக்கைகளில் மிகவும் பிரபலம்.  இந்நிலையில்தான் மனோ பள்ளியொன்றில் கலந்துகொன்டு உரையாற்றுகிறார் என்று கேள்விப்பட்டேன்.  உடல்நிலை ஒத்துழைக்காவிட்டாலும் கண்டிப்பாக கலந்து கொள்ளவேண்டும் முடிவெடுத்தேன், கலந்து கொண்டேன்.  அன்று அவரது பேச்சு எனக்கு புது உத்வேகத்தை அளித்தது.  அப்போதே கேணிக்கு அவரை கண்டிப்பாக அழைக்கவேண்டும், வாசகர்களும் அந்த அனுபவத்தைப் பெறவேண்டும் என்று முடிவெடுத்தேன்.  இனி மனோ உங்களுடன் தொடர்ந்து பேசுவார் என்று முடித்துக்கொண்டார்.

மனோவிற்கு ஒரு கண்ணில் பார்வை கிடையாது.  மறுகண்ணில் பார்வை மங்கியிருந்தது.  லேசாக தலையை தூக்கி அண்ணாந்து பார்த்தவாறே பேசத்துவங்கினார்.  நமது சூழலில் எவ்வளவு அவலங்கள் நிறைந்திருந்தாலும் இந்தியா முன்னேறுகின்ற நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கு நல்லவர்கள் நிரம்ப சூழ்ந்திருப்பதே என்று நான் வெகுவாக நம்புகிறேன் என்று அவர் ஆரம்பித்தபோது, ஒரே தத்துவமாக பேசி போரடிக்கப்போகிறாரோ என கொஞ்சம் பயந்துதான் போனேன்.  மிக நுட்பமான நகைச்சுவை இழையோட, வெள்ளந்தியான, அழுக்கற்ற ஒரு வாழ்கையையே கேட்கப்போகிறோம் என என் மனம் அப்போது அறிந்திருக்கவில்லை.  நான் கலந்துகொண்ட கேணி கூட்டஙளிலேயே நாஞ்சில் நாடனின் பேச்சுதான் என்னை மிகவும் கவர்ந்தது.  தமிழின் சொற்பிரயோகம் பற்றிய அற்புதமான உரை அது.  அதற்கு நிகரான, ஆனால் ஓவியம் என்ற தளத்தில், முற்றிலும் மாறான அனுபவத்தை மனோ தன் பேச்சு மூலம் கேணி வாசகர்களுக்கு அளித்தார்.

மனோ அடிப்படையில் ஒரு வேதியியல் நிபுணர், ஆராய்ச்சியாளராக தொடர்ந்து 40 வருடங்கள் பணிபுரிந்திருக்கிறார்.  கல்லூரியில் பயிலும்போது வேதியியல் பேராசிரியராவதே அவருக்கு லட்சியமாக இருந்தது என்றாலும் குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை காரணமாக முதுகலை படிக்காமல் வேலைக்கு செல்லும்படி ஆகிவிட்டது.  ஆஸ்பிடாஸ் பொருத்தப்பட்ட, வேதிப்பொருட்களின் நெடியடிக்கும் அறையில், வியர்வையில் குளித்தவாறே வேலை செய்வதை அவர் மனம் விரும்பாவிட்டாலும், கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கடுமையாக உழைக்கத்துவங்கினார்.  சிறிதுகாலத்தில் அவரது அண்ணன் நல்ல வேலையில் அமர்ந்ததால், குடும்பம் மெள்ள மெள்ள சீரான நிலைமையை அடைந்தது.  எனவே மனோ வேலையை விட்டுவிட்டு மேற்படிப்பு படிக்கவேன்டும் என்று விரும்பினார்.  அவர் வேலையை விட்டு நிற்பதை அவரது உயரதிகாரிகள் விரும்பவில்லை, அவர் தொடர்ந்து அங்கேயே வேலை செய்தால் அவரை வெளிநாடுகளுக்கு அனுப்பி பயிற்சி அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.  இந்த காலத்தைப் போன்று வெளிநாடு செல்வது அக்காலத்தில் அத்தனை எளிதானதாக இல்லை.  ஒருவர் வெளிநாடு சென்று திரும்பினார் என்று வைத்துக்கொள்வோம், அவர் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும்போது, இவர் பாரின் ரிட்டன் என்ற சொற்பதம் கண்டிப்பாக இருக்கும்.  சொன்னபடியே வெளிநாடு அனுப்பிவைக்கப்பட்டார்.  கொஞ்ச நாட்களில் வெளிநாடுகளில் பயிற்சியை முடித்துவிட்டு தாயகம் திரும்பினார்.  ஓவியம் வரைவதிலிருந்த ஆர்வம் காரணமாக அதிக அளவில் ஓவியங்கள் வரையத்துவங்கினார்.

மனோவின் நண்பர் இவரது ஓவியஙள் பற்றி தனது உறவினரான "மஹிமாவிடம்" தினமும் பகிர்ந்து கொள்வார்.  பைன் ஆர்ட்ஸ் மாணவியான மஹிமாவுக்கு மை தொட்டு வரையப்பட்ட வாட்டர் கலர் ஓவியங்கள் மிகவும் பிடித்திருந்தன.  ஓவிய படிப்பில் தங்கப்பதக்கம் வென்றவர் என்பதால் அவரால் மனோவின் ஓவியங்களின் நுட்பங்களை துல்லியமாக உணர முடிந்தது.  மனோவும் மஹிமா பற்றி தெரிந்துகொண்டபின் அவரை சந்திக்கவேண்டுமென்று விரும்பினார்.  அடுத்தடுத்த சந்திப்புகளில் இருவருக்கும் காதல் அரும்பியதால் இருவரும் தத்தம் காதலை பெற்றோர்களிடம் தெரிவித்தனர்.  மனோவின் வீட்டில் எவ்வித பிரச்சனையும் இல்லை, ஆனால் மஹிமாவினால் அவ்வளவு எளிதில் வீட்டில் சம்மதம் பெற முடியவில்லை.  கடைசியில் மாப்பிள்ளை பாரின் ரிட்டன் என்ற ஒரே காரணத்திற்காக மஹிமாவின் பெற்றோர் சம்மதம் தந்தனர்.  திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டதால் மஹிமாவை அவரது வீட்டில் வைத்து தனிமையில் சந்தித்து பேசவும், சினிமா அல்லது கோயிலுக்கு அழைத்துச்செல்லவும், கடிதங்கள் எழுதவும் மனோவிற்கு அனுமதி கிடைத்தது.  தினமும் கடிதஙள் எழுதத்தொடங்கினார்.  அவற்றில் தவறாமல் ஓவியங்கள் வரைவார்.  கடிதங்கள் எழுத எழுத, ஓவியங்கள் வரைய வரைய, அவரது ஓவியங்களின் தரம் அதிகரித்துக்கொண்டே சென்றது.



ஓருநாள் மாலைவேளையில் மஹிமாவை சந்திக்க அவரது வீட்டிற்கு மனோ சென்றிருந்தார்.  மஹிமா இயற்கையை ரசிப்பதில் ஆர்வம் கொன்டவர்.  அந்த மாலை வேளையின் அழகை மாடியில் நின்று ரசித்துக்கொண்டிருந்தார்.  மஹிமா தனியே மாடியில் நிற்பதை மனோ அறிகிறார். அழகான இந்த வேளையில் காதலியை தனியே சந்தித்துப்பேச கிடைத்த இந்த வாய்ப்பு மனோவிற்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.   மனோ மாடிக்கு செல்கிறார்.  அங்கே ஜப்பானிய உடையணிந்து கையில் தேநீர் கோப்பையுடன் வானத்தை ரசித்தபடி மஹிமா நின்றுகொண்டிருந்தார்.  அந்த உடையில் மஹிமா மனோவிற்கு ஒரு தேவதை போல் தெரிந்தார்.  அந்த உடை மஹிமாவிற்கு மிகவும் அழகாக  இருப்பதாக மனோ மஹிமாவிடம் சொல்கிறார்.  நெடுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு, வீடு திரும்புகையில் மஹிமாவிற்கு மனோ ஒரு முத்தத்தை பரிசாக அளிக்கிறார்.  வீட்டை அடைந்தவுடனேயே மீன்டும் மஹிமாவிற்கு கடிதம் எழுதுகிறார்.  காதல் ரசம் சொட்ட எழுதப்பட்ட அந்த கடிதத்தில் ஜப்பானிய உடை அணிந்த மஹிமாவின் ஓவியம் வரையப்பட்டிருந்தது.

மஹிமாவின் மாமாவிற்கு மனோவை கொஞமும் பிடிக்கவில்லை; மதுரையிலிருந்து வந்த ஒரு காட்டான் என்றார்.  மனோவிற்கும் அவரை கொஞ்சமும் பிடிக்காது, அவரை ஒரு தலைக்கணம் பிடித்தவர் என்றே நினைத்தார்.  மனோவை அவர் காட்டான் என்று அழைத்தது மனோவின் குடும்பத்தாரை மிகவும் கோபமடையச் செய்தது.  மனோவிற்கு தர்மசங்கடமான நிலையாகப் போய்விட்டது.  ஏனெனில், பதிலுக்கு இவர் ஏதாவது செய்தால் மஹிமாவின் குடும்பத்தினர் கோபம் கொள்ளலாம், ஒன்றுமே செய்யாவிட்டாலோ கல்யாணத்துக்கு முன்னமே பெண் வீட்டாருக்கு ஜால்ரா அடிக்கிறானே என்று இவரது வீட்டில் பேசுவார்கள்.  என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்திலிருந்த மனோ அன்று மீண்டும் மஹிமாவிற்கு கடிதம் எழுதினார், மேலும் அதில் ஒரு காட்டுவாசி ஜப்பானிய உடை அணிந்த தேவதை போன்ற பெண்ணை திருமணம் செய்து அழைத்துச் செல்வதுபோல் ஒரு ஓவியத்தையும் வரைந்து அனுப்பினார்.  சூசகமான இந்த பதிலை மஹிமாவுடன், அவரது மாமாவும் வெகுவாக ரசித்தார்.  அன்று முதல் அவரது மாமாவும் மனோவும் மிகவும் நெருக்கமானவர்களாக மாறிவிட்டனர்.  மஹிமாவும், கூர்மையான ஓவிய அறிவும், சமயோசிதமான நகைச்சுவையுணர்வும் கொண்ட மனோவை வெகுவாக ரசித்தார்.

திருமணமான சிறிது நாட்களில் மனோ மேற்படிப்பிற்காக மஹிமாவுடன் அமெரிக்கா சென்றார்.  மஹிமாவிற்கு அங்கே ஓர் ஓவிய கல்லூரியில் வேலை கிடைத்தது.  இருவரும் மிக மகிழ்ச்சியாக அமெரிக்க வாழ்வை கழித்தனர்.  மஹிமா மனோகர் வரைந்த ஓவியங்களை வைத்து ஒரு கண்காட்சி நடத்தினார்.  அங்கே அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.  அங்கே நடத்தப்படும் நாடகங்கள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கும் ஓவியங்கள் வரையத்துவங்கினார்.  புதுமையான அவ்வகை ஓவியங்கள் அமெரிக்கர்களை வெகுவாக கவர்ந்தது.  அவரது படிப்பு முடிந்தபின்பு இருவரும் இந்தியா திரும்பினர்.  மனோ தம் வாழ்வை மதுரையில்தான் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்பினார்.  அதன்படி இருவரும் மதுரைக்கு காரில் வந்துகொண்டிருந்த சமயத்தில்-அனாதையாக நின்றுகொண்டிருந்த கார் மீது ஒரு லாரி மோதி, அந்த கார் மனோவின் கார் மீது மோதியது.  மனோவிற்கு சிறிய காயங்களே ஏற்பட்டாலும், மஹிமா மிகவும் மோசமாக தாக்கப்பட்டிருந்தார்.  அவரது கால்களும் தண்டுவடமும் செயலிழந்துவிட்டிருந்தன.

எதிர்பாராத இந்த கணத்தில் அவர்களது ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையே முற்றிலுமாக சிதைந்துவிட்டிருந்தது.  முழுக்க அதிலிருந்து மீளவும் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பவுமே நெடுநாட்களாகிவிட்டிருந்தன.  நடந்தது நடந்துவிட்டது, இனி அதை நினைத்து எந்த பிரயோசனமும் இல்லை, மீதமுள்ள வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ளப் போகிறோம் என்று மஹிமா சிந்திக்கத் தொடங்கினார்.  காலம் அவர்களுக்குக் காட்டிய வினோதமான இந்த பரிமாணம், வாழ்க்கை பற்றியும், மற்றவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றியும் மஹிமாவை அதிகமாக சிந்திக்க தூண்டியது.  மற்றவர்களுக்கு தம்மாலான உதவியை செய்வதன் மூலம் இந்த சோர்வை தாம் வெல்ல முடியும் என தீவிரமாக நம்பினார்.  எனவே இனி ஓவியங்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருவாயையும் பிறருக்கு உதவி செய்வதிலேயே செலவிடவேண்டுமென்று முடிவு செய்தனர்.  மனோ தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தார்.  பல்வேறு பத்திரிக்கைகளில் அவை வெளியாயின.  இந்து பத்திரிக்கை ராம் கூட மனோவை அவரது ஓவியஙளுக்காக வெகுவாக பாராட்டியிருக்கிறார்.  வாழ்த்து அட்டைகளுக்கு மனோ வரைந்த ஓவியங்கள் சிறிது சிறிதாக பிரபலமடையத் துவங்கின.  சிறிய அளவில் ஆரம்பித்த இந்த முயற்சி, பிந்நாட்களில் பெரிய வருவாயை ஈட்டிக்கொடுத்தது.  அதிலிருந்து கிடைத்த அனைத்து வருவாயையும் தொண்டுநிறுவனங்களுக்கும் அரவிந்த் போன்ற கண் மருத்துவமனைகளுக்கும் அளித்தனர்.  அவர்கள் நெடுங்காலமாக தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் பணி இது.

மனோ தனது 33வது வயதில் தன் கண்களில் பார்வை குறைபாடு இருப்பதாக உணர்ந்தார்.  அப்போது அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.  வேலைக்குச் செல்வதிலும் ஓவியங்கள் வரைவதிலுமே மிகுந்த ஊக்கத்துடன் செயல்பட்டார்.  நாட்கள் செல்லச் செல்ல அவரது இடது கண்ணின் பார்வை வேகமாக மங்கத் தொடங்கியது.  மருத்துவ பரிசோதனையில் அவரை Ophthalmic Retinopathy தாக்கியிருப்பது தெரியவந்தது.  இனி மனோவின் கண்கள் பார்வையை இழப்பதை தவிர்க்கமுடியாது என்பதை அறிந்த மஹிமா மிகவும் வேதனையடைந்தார்.  வேதனையிலேயே நாட்கள் சென்றுகொண்டிருந்தன.  இன்னாட்களில் மஹிமா மனோவிற்கு அளித்த ஊக்கம் அளப்பரியது.  குறைவான நாட்களே மிஞ்சியிருப்பதால் அதிகமான ஓவியங்கள் வரைய மனோவை தூண்டிக்கொண்டேயிருந்தார்.

மனோவிற்கு புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது.  எனவே அவர் ஓவியம் வரையும் போது மஹிமா அவருக்காக அவருக்கு கேட்கும்படிக்கு சத்தமாக Wheelchair-ல் அமர்ந்தபடியே புத்தகங்கள் வாசித்துக்காட்டிக்கொண்டிருப்பார்.  [இச்சித்திரம் என் மனதில் தோன்றிய அந்த வேளையில் சொல்லொனாத்துயரம் என்னை ஆட்கொண்டிருந்தது, ஆனால் மனோ கொஞ்சமும் தன்னிரக்கம் வேண்டாமல் எளிதாக அவற்றை கடந்துசென்றுகொண்டிருந்தார்].  இந்நிலையில் மதுரையின் தனது பால்யகால சூழல்களை ஓவியங்களாக பதிவு செய்யவேண்டும் என்று மனோ விரும்பினார்.  மஹிமாவுடன் மீண்டும் மதுரைக்கு திரும்பினார்.  மதுரையின் சுற்றுப்புறங்களை நிறைய வரைந்தார்.  மீனாட்சி அம்மன் கோயிலின் கோபுரங்களையும் மண்டபங்களையும் நுணுக்கமாக வரைந்தார்.  ஞாநி வீட்டில் நாங்கள் நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு பார்த்தவை அவ்வோவியங்களைத்தாம்.  நினைக்கையில் சிலிர்ப்பாக இருந்தது.  கோயிலின் உட்பிரகாரத்தை வரைந்த கணம் ஏறத்தாழ மனோ தன் பார்வையை இழந்துவிட்டிருந்தார்.  அதிலுள்ள சிற்பங்களை மனதில் பதிவு செய்வதற்காக தடவிப் பார்க்கையில்தான் ஒரு சிம்ம சிற்பத்தையே அது இருப்பதை உணர்ந்திருக்கிர்றார்.  அவ்வோவியங்களை அவர் வரைய உதவிய அனைவரையுமே நன்றியோடு நினைவுகூர்ந்தார்.  அவர்களின் உதவி இல்லாவிடில் இவ்வோவியஙளை தாம் வரைவதுபற்றி கனவுகூட கண்டிருக்க முடியாது என்றார்.  அச்சிற்பத்தை செதுக்கிய சிற்பியின் கலைத்திறனை வியந்து பாராட்டி அதைப் பற்றிய தமது கருத்துக்களையும் எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.

வடக்குமாசி வீதியிலிருந்த ஒரு வீட்டையும், மதுரையை சுற்றிய இயற்கைகாட்சியில் ஒரு மேகத்தையும் வரைய அவர் எடுத்துக்கொண்ட முயற்சிகளை மிகவும் சுவாரசியமாக எங்களுடன் பகிர்ந்துகொண்டார்.  அந்த வீட்டை வரைய அவர் பயன்படுத்திய திரிகோணமிதி கணக்கீடுகள் எங்களுக்கு காட்டப்பட்டன.  நுட்பமாக வரைவதற்கு அவர் எடுத்த சிரத்தைகளை மனதளவில் நினைத்துப் பார்த்தபொழுது வியப்பாக இருந்தது.  மதுரையை சுற்றிய இயற்கை காட்சிகளை வரையும்போது, மேகங்களை கறுப்பு வெள்ளையில் வரைவதின் சிக்கல்களையும், ஒரு ஓவியத்தில் அவர் அச்சிக்கலை எவ்வாறு கடந்துவந்தார் என்பதையும் செயல்முறை விளக்கமாக திரையில் நாங்கள் பார்த்தபோது மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கைதட்டிக்கொண்டேயிருந்தோம்.  கைதட்டல் அடங்கவே வெகுநேரமாகியது.





வீட்டில் அனைத்து வேலைகளையும் கவனித்துக்கொள்வது மனோ தான்.  மஹிமாவிற்கு மாடியில் அமர்ந்து இயற்கையை ரசிப்பது மிகவும் பிடிக்கும்.  மனோ தினமும் மஹிமாவை Wheelchair-ல் அமர்த்தியபடியே மாடிக்கு கொண்டுசெல்வார்.  ஒரு காலை வாகனத்திற்கு முட்டுகொடுத்துக்கொண்டு அதன் கைப்பிடியை இறுக்க பற்றி காலால் நெம்பும்போது வாகனத்தை ஒருபடியிலிருந்து இன்னொரு படிக்கு ஏற்றமுடியும்.  இவ்வாறு ஒவ்வொரு படியாக கடந்து மாடியை அடைய எவ்வளவு நேரம் ஆகியிருந்திருக்கும் என்பதை நாம் நினைத்தால் அதன் கஷ்டத்தை உணர முடியும்.  மாடிக்கு ஏற்றுவது கூட அவ்வளவு கடினமல்ல, மாடியிலிருந்து கீழே இறக்குவதை நினைத்தபோதுதான் எனக்கு பகீரென்றிருந்தது.   தீராத காதல் என்றால் என்ன என்பதை நான் அன்றுதான் உணர்ந்தேன்.

ஒருவர்மேல் ஒருவர் கொண்ட மிதமிஞ்சிய அன்பால் எவ்வித அலுப்பும் இல்லாமல் வாழ்க்கை மிக மிக சுவாரசியமாகவே சென்றுகொண்டிருந்தது.  ஒருநாள் திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மஹிமாவை அழைத்துக்கொண்டு திருமண மஹாலுக்கு சென்றார் மனோ.  உன்னதமான தம்பதிகளான இந்த தம்பதியர் விலையுயர்ந்த ஆடைகள் அணிந்திருந்தனர்.  மஹிமா பட்டுப்புடவையிலும், மனோ கோட் சூட்டிலும் மிகவும் அழகாய் இருப்பதாக பரஸ்பரம் உணர்ந்து, மயக்கமூட்டிய அந்த சூழலை வெகுவாய் ரசித்துக்கொண்டிருந்தனர்.  மனோ அணிந்திருக்கும் கோட்டில் ஒரு ரோஜா குத்தப்பட்டிருந்தால் மிகவும் அழகாயிருக்கும் என்று நினைத்து மஹிமா மனோவிற்கு ரோஜா அணிவிக்கிறார்.  வாழ்வில் தன்னால் மறக்கவே முடியாத உன்னத தருணமாக இதை கருதுவதாக மனோ எஙளுடன் பகிர்ந்துகொன்டார். விழா முடிந்து வீட்டிற்கு கிளம்புவதற்காக காரை வரவழைத்திருந்தார் மனோ.  மஹிமாவை wheelchair-ல் அமர்த்தி வெளியே தள்ளிக்கொண்டு வரும்போது வாசலை கடக்குமிடத்தில் படிக்கட்டுகள் அமைந்திருந்தன.  அதை கடப்பது கொஞம் கடினமாக இருந்த நேரத்தில் இரு இளைஞர்கள் இவர்களை கவனித்துக்கொண்டிருந்தனர்.  மனோவிற்கு உதவி செய்யலாம் என்று முடிவெடுத்து மனோவிடம் நாங்கள் உதவி செய்கிறோம் என்று கூறியவாறே நெருங்கிவந்தனர்.  மனோ அவர்களது உதவியை மறுத்தும் கேளாமல் Wheelchair-இன் கைப்பிடியை பற்றினர்.  மூவருக்கிடையேயான தவறான புரிதலால் மஹிமாவை சுமந்திருந்த வாகனம் தள்ளாடியது.  அந்நேரத்தில் அதை பிடிக்க முற்பட்ட மனோ சரியான பிடி கிடைக்காமல் தவறி விழுந்துவிட்டார்.  விழுந்த அந்நொடியில் மஹிமாவிற்கு என்ன நேர்ந்திருக்குமோ என்ற பதட்டத்திலேயே விரைந்து எழுந்தார்.  நடக்க முடியாத முதிர்வயது பெண்மணியை அழைத்துவந்துவிட்டு இவ்வளவு கவனக்குகுறைவாக இருந்துவிட்டானே என்று மற்றவர்களும் சொல்வார்களே என்று பதறினார்.  நல்லவேளையாக மஹிமாவிற்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.  நிம்மதிப்பெருமூச்சுடன் மஹிமாவை வெளியே அழைத்து வந்தார்.  சில்லென்று குளிர்காற்று வீசியது.  மழை வருவதுபோல் மேகம் கறுத்துக்கொண்டு வந்தது.  ஏதொ ஒரு அசூயையை உணர்ந்தவாறே சூட்டின் பின்பக்கம் தடவிப்பார்த்த போதுதான் அவரது சூட் பின்பக்கமாக கிழிந்திருப்பது தெரியவந்தது.  அந்நிகழ்வையும் அவர் ஓவியமாக பதிவு செய்திருக்கிறார்.  கருப்பு சூட் அணிந்திருந்த முதியவர் அது லேசாக கிழிந்ததினால் வெள்ளை உள்ளாடை தெரிய மூன்று சக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் பெண் பக்கத்தில் நின்றிருப்பது போன்ற அவ்வோவியம் மனோவின் நகைச்சுவை உணர்வினையும், அதே நேரத்தில் அவரது கற்பனைத் திறனையும் எஙளுக்கு உணர்த்தியது.

திருமணத்திற்கு முன்பு மனோ ஒருமுறை மஹிமாவை அழைத்துக்கொண்டு சினிமாவிற்கு சென்றிருந்திருக்கிறார்.  அந்த திரைப்படத்தில் கதாநாயகி கரடி பொம்மையுடன் தூங்குவதுபொல் ஒரு காட்சி வருகிறது.  மனோ மஹிமாவிடம், "மஹி... நீ இவ்வாறு பொம்மையுடன் தூங்குவதை விரும்புவாயா" என்ட்ரு கேட்க, மஹிமாவும் சிரித்துக்கொண்டே, "இந்தமாதிரியான சின்ன கரடி பொம்மையுடன் தூங்கி பழக்கமில்லை, ஆனால் இன்னும் சிறிது நாட்களில் ஒரு பெரிய உயிருள்ள கரடி பொம்மையுடன் தூங்கப்போவதை நினைத்தால்தான் பயமாயிருக்கிறது" என்றிருக்கிறார்.  இந்த சொல்லாடல் மனோவை மிகவும் கவரவே, தனது கடிதத்தில் ஒரு கரடி பொம்மை அழகான சிறுமியை வெள்ளந்தியாக ரசித்து பார்த்துக்கொண்டிருப்பது போலவும், சிறுமி கரடி பொம்மையை வெக்கத்துடன் ஓரக்கண்ணால் பார்ப்பது போலவும் ஓவியம் வரைந்து மஹிமாவிற்கு அனுப்பியிருக்கிரார்.  காதல் ததும்பிய அந்த ஓவியத்தை நாங்கள் வெகுவாய் ரசித்தோம்.

மூன்று வருடஙளுக்கு முன் ஒருநாள் தூக்கத்திலேயே மஹிமாவின் உயிர் பிரிந்துவிட்டது.  திரும்பவே பெறமுடியாத இந்த இழப்பு மனோவை நிலைகுலையச் செய்தது.  மஹிமாவின் நினைவுகளை மீட்டியபடியே தன் வாழ்நாளை இன்றுவரை கழித்துவருகிறார்.  ஓருநாள் மஹிமாவின் கல்லறைக்கு தன் மகளுடன் சென்றுவிட்டு வேடு திரும்பும்போது, அவரது மகள் கல்லறைக்கு மிக அருகில் பட்டுப்பூச்சியின் லாவாவை பார்த்திருந்திருக்கிறார்.  ஒரு லாவா எவ்வாறு ஒரு அழகான பட்டுப்பூச்சியாக உருமாற்றமடைகிறது, என்பதை தன் மகனுக்கு நேரடியாக விளக்கலாமே என்ட்ரு அந்த லாவாவை வேட்டுக்கு எடுத்து வந்து பாதுகாத்து வந்திருக்கின்றார்.  மஹிமாவுடனான தனது கடந்தகால வாழ்க்கையை நினைத்தவாறு நாற்காலியில் அமர்ந்தவாறே லாவாவை பார்த்துக்கொன்டிருந்த அக்கணத்தில் அந்த லாவா அழகான பட்டுப்பூச்சியாக உருமாறி மனோ வீட்டு தோட்டத்திற்குள் புகுந்து மறைந்துவிட்டது.  இக்காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்த மனோ விளக்கமுடியாத வலியில் மனம் தத்தளிப்பதை உணர்ந்தார்.  அந்த பட்டாம்பூச்சி மஹிமாதான் என்று அவர் மனம் உறுதியாக நம்பியது.  நினைவுகளை மீட்டி அந்த கணத்தில் ஒரு ஓவியம் வரைந்தார்.  அதில் அதே கரடிபொம்மை சொல்லொனாத்துயரை கண்களில் அடக்கியவாறு சிறுமியை இழந்த ஏக்கத்துடன் கையில் ஒரு அழகான பட்டாம்பூச்சியை வைத்து பார்த்துக்கொண்டிருந்தது.  சிறுமியை பட்டாம்பூச்சியாக அவர் செய்த கற்பனை என்னை கிறங்கடித்துவிட்டது.  கணத்த இதயத்துடன் தான் நாங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தோம்.

அதன்பின் வாசகர்களின் கேள்விநேரம் தொடங்கியது.  அங்கு கேட்கப்பட்ட கேள்விகளிலேயே ஞாநியின் கேள்வி மிகவும் முக்கியமானது.  "இவ்வளவு மோசமான சூழல்கள் உங்களைத் தாக்கியபோதும், நீங்கள் ஏன் கடவுள் நம்பிக்கை, மதம் என செல்லவில்லை."  அதற்கு மனோ அளித்த பதிலும் சிறப்பானதுதான்.  "கடவுளின் மீது எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் மஹிக்கு இருக்கத்தான் செய்தது.  ஆனால் இங்கு வழிபாடுகளில் பணமும் முன்னிறுத்தப்படுவது எனக்கு உகந்ததாய் இல்லை.  எனவே வீட்டிற்கு யாராவது ஜெபம் செய்ய வந்தால், கடவுள் எங்கும் இருக்கிறார்தானே, நீங்கள் ஏன் உங்கள் இருப்பிடத்தில் இருந்துகொண்டே எங்களுக்காக கடவுளை பிரார்த்திக்கக் கூடாது" என்று கேட்டு அனுப்பிவிடுவேன் என பதிலளித்தார்.  ஒரு துறையில் ஜீனியசாக இருப்பவர்கள் கடவுள் விஷயத்தில் மொன்னையாக இருப்பார்கள், எப்போதுமே எனக்கு சோர்வுதரும் விஷயம் இது.  மனோவின் கோட்பாடு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  கலந்துரையாடல்களுக்கிடையே மனோ தான் வரைந்த அனைத்து ஓவியஙளையும் வைத்து ஒரு ஓவிய கண்காட்சி நடத்திய பொழுது மஹிமாவை பெருமைப்படுத்தும் விதமாக பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டமை குறித்து மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டார்.



இறுதியாக பாஸ்கர்சக்தியின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது.  ஒவ்வொருமுறை காலம் தன்னை நிலைகுலைய வைத்தபோதும் பிறருக்கு உதவுவது மூலம் அந்த துன்பத்தை மனோவும் மஹியும் கடந்து வந்தார்கள் என இந்த பதிவில் என்னால் சிறப்பாக விளக்க முடியவில்லையெனினும், ஞாநி மனோவை கேணிக்கு அழைத்துவந்ததன் நோக்கம் அதுதான்.  மீன்டும் அவர் வரைந்த ஓவியங்களையும் அவர் எழுதிய புத்தகஙளையும் பார்த்தேன்.  உயிரோட்டமான மஹிமாவின் புகைப்படம் ஒரு புத்தகத்தின் அட்டைப்படமாக வடிவமைக்கப்பட்டிருந்தது.  இவவளவு அழகான பெண் எவ்வாறு தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஊணமாகவே கழித்தார் என்று நினைத்தபோது துக்கமாக இருந்தது.  நம்பிக்கையூட்டும் விஷயமாக எனக்கு தோன்றியது அந்த துக்கத்தை கடப்பதற்கு அவர் பிறருக்கு உதவுவதையே தேர்ந்தெடுத்தார் என்பதுதான்.

சில படைப்புகளை படித்த பின்போ அல்லது சில திரைப்படங்களை பார்த்தபின்போ கொஞ்சநாட்களுக்கு அதைப்பற்றிய நினைவுகளே நம்மைப் பீடித்திருக்கும், வேறெதிலும் மனம் கொஞ்சம் கூட ஆர்வம் காட்டாது.  அதே மனநிலையில் அன்று நான் இருந்ததால் அதே மாலையில் ஞாநி வெளியிடவிருந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை.  கணத்த இதயத்துடன் வீட்டுக்கு திரும்பிவிட்டேன்.  என்னை மிக மிக வசீகரித்த ஆளுமைகளில் ஞாநியும் ஒருவர் என்பதால் நிகழ்ச்சிக்கு செல்லாததும் வருத்தமாகத்தான் இருந்தது.  ஆனாலும் வேறு வழியில்லை.  இரவெல்லாம் மனோ-மஹியின் உன்னதமான காதல் நெஞ்சில் நிறைந்திருந்தது.









(பதிவு என் ஞாபகத்திலிருந்து எழுதப்பட்டது.  தகவல்பிழைகளுக்கு நானே காரணம்.   அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட நண்பர்கள் தவறை சுட்டிக்காட்டினால் தவறை திருத்திவிடுகிறேன்)   

1 comment:

  1. ஓவியர், உன்னதமான கலாரசிகர், அன்பான வாழ்க்கை துணை கொண்ட திரு மனோ அவர்களின் எனது மதுரை நினைவுகள் புத்தகத்தை மதுரை வீதிகளில் கண்டு ரசித்திருக்கிறேன். அந்நாளில் எனக்கு அந்த புத்தகத்தை வாங்க பணம் இல்லை.

    புத்தகத்தை பார்க்கலாமா என்றால் முடியாது. முற்றிலும் சீல் செய்து இருக்கும்.

    பின்நாளில் நூலகத்தில் வாசித்து என் ஆவலை பூர்த்தி செய்தேன்.

    பிறகு நானும் ஒரு ஓவிய ஆசிரியராகப் பணி செய்கிறேன்.
    ஒரு ஓவியராக தனிநபருக்கு பத்ம விருது வழங்கப்பட்டது அவர் எந்த அளவுக்கு மகிழ்ச்சி அடைந்தார் என்று தெரியவில்லை.

    நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்

    ReplyDelete