Sunday, January 2, 2011

இந்திய அமெரிக்க மருத்துவம்- சில ஒப்பீடுகள்

படித்தது இளங்கலை கணிதம் என்றாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக  Healthcare BPO-ல் வேலை செய்துவருவதால், கணிதத்துக்கும் எனக்குமான தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது என்றே கொள்ளலாம். உயிரியல் படிக்கவில்லையென்றாலும், மருத்துவம் சம்பந்தப்பட்ட துறையில் வேலை செய்வது மனநிறைவான விஷயம்தான். நம் உடலே பூமியை விட புதிர் நிறைந்தது. தம் உடலை கூர்ந்து நோக்கும் ஒருவனால் இயற்கையின் மகத்துவத்தை முழுமையாய் உணர முடியும். ஆகவே அனைவருமே தத்தம் உடலைப் பற்றியும் உடலைப் பாதுகாக்கும் மருத்துவம் பற்றியும் பெருமளவில் தெரிந்து வைத்துக்கொள்வது முக்கியமானது. வியப்பூட்டும் இப்போதைய மருத்துவத்துறையை நாமும் அமெரிக்கர்களும் எவ்வாறு கையாளுகிறோம், மனிதததுவததை மருத்துவத்தில் கடைபிடிப்பதில் இருநாடுகளுக்கிடையேயான வேறுபாடுகள் என்னென்ன, என்பது பற்றி சிறிதேனும் சிந்திப்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கம்.

தத்தம் உடலை பற்றிய விழிப்புணர்வு அனைத்து மனிதர்களுக்குமே இருக்கவேண்டிய ஒன்றாகும். இந்த விழிப்புணர்வு குழந்தைப்பருவம் முதற்கொண்டே படிப்படியாக அமெரிக்கர்களுக்கு அளிக்கப்படுகிறது. பள்ளிகளும் அவர்களது வாழ்க்கை முறைமைகளும் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. வாழ்க்கை கல்வியை ஏட்டோடு நிறுத்திவிடாமல் செய்முறையாக அளிப்பதற்கே அங்குள்ள கல்விக்கூடங்கள் முன்னுரிமை அளிக்கின்றன. இங்கே நாம் உடற்கல்வி படிப்பை செக்ஸ் கல்வி என்று தவறாக புரிந்துகொண்டு அதை பள்ளிக்குழந்தைகளுக்கு கற்றுத் தருவதா வேண்டாமா என்று குழம்பிக்கொண்டு இருக்கிறோம். (செக்ஸ் கல்வி என்பதே கூட தவறான வார்த்தை அல்ல என்பதே என் புரிதல் என்பது வேறு விஷயம்).

நம்மிடையே பலருக்கும் நம் உடலின் பல பாகங்களின் பெயர்களோ அல்லது அப்பாகங்கள் என்னென்ன வேலைகள் செய்கின்றன என்றோ தெரிவதில்லை. நம் ஏட்டுக்கல்வி அது பற்றிய புரிதலை நமக்கு அளிக்கவில்லை என்பது வேதனையான விஷயம்தான். இந்நிலை அங்கு இல்லை. நம் உடலைத் தாக்குவதில் நுண்ணிய கிருமிகளின் பங்கு என்ன, அவற்றின் தாக்குதல்களிலிருந்து நம் உடலை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்ற விளிப்புணர்வு அங்கு மிகவும் அதிகம். வாழ்க்கைகல்வி என்ற பிரிவில் சுத்தம் என்ற சொல் முக்கிய பங்காற்றுகிறது. தம் உடலை எவ்வாறு சுத்தமாக வைத்துக்கொள்வது என்று குழந்தைகளுக்கு கூட தெளிவாக கற்பிக்கப்படுகிறது. மருத்தவம் சம்பந்தமான குறியீட்டு சொற்கள் வெளியில் சகஜமாக பயன்படுத்தப்படுகிறது. காய்ச்சல், வாந்தி, பேதி போன்றவை நோய்கள் அல்ல, ஏதோவொரு வரப்போகும் நோய்க்கு அறிகுறி (Symptoms) என்பதை தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார்கள். உடலில் ஏதேனும் நோய்க்கான அறிகுறி தென்பட்டால் என்னென்ன முதலுதவிகள் செய்யப்படவேண்டும் என்பதை குழந்தைகள் கூட அறிந்து வைத்திருக்கின்றன. என்னென்ன மருந்துகள் உட்கொள்ளப்படவேண்டும் என்பது ஏறத்தாழ அங்கு அனைவருமே தெரிந்துவைத்திருக்கும் விஷயமாகும்.

அமெரிக்காவில் அனைத்துமே Insurance மயம்தான். அனைவருக்குமே மருத்துவ காப்பீடு என்பது அமெரிக்க நியதியாகும். அதன்படி, பிறக்கும் எந்த குழந்தையையுமே மருத்துவக் காப்பீடு செய்யாமல் மருத்துவமனையை விட்டு வெளியே கூட கொண்டுவரமுடியாது. அனைவருமே மருத்துவ காப்பீட்டுக்கு பணம் செலுத்த வேண்டும் என்பது அங்கே கண்டிப்பான விதிமுறைகளில் ஒன்றாகும். அதன்பின் குழந்தையின் மரணம் வரை அதன் மருத்துவம் சம்பத்தப் பட்ட அனைத்து விஷயங்களுக்கும் மருத்துவ காப்பீட்டு நிறுவனமே பொறுப்பு. பணம் அதிகமாக புழங்கும் முக்கியமான துறைகளில் மருத்துவம் அமெரிக்காவில் முக்கிய பங்கை வகிக்கிறது.

மக்களிடமிருந்து மருத்துவத்திற்காக நேரடியாக ஒரு பைசா கூட வசூலிக்கப்படுவதில்லை; அனைத்தையுமே ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களே கவனித்துக்கொள்கின்றன. ஒருவர் எவ்வகையான காப்பிடைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதும் மிகவும் முக்கியம். ஒருசில நோய்களுக்கான காப்பீடுகள் சரிவர எடுத்திருக்கப்படவில்லையெனின் தயவுதாட்சன்யமே இல்லாமல் மருத்துவர் மருத்துவம் செய்யாமல் அடுத்த நோயாளியை கவனிக்க சென்றுவிடுவார் என்பதும் இங்கே கவனிக்கப்படவேண்டியது. ஆனால் இவ்வாறு ஆவதின் சதவீதம் மிகவும் குறைவுதான். இங்கே நம்மூரில் எடுக்கப்படும் எந்த பாலிசியிலும் தில்லாலங்கடிகள் அவசியம் இருக்கும். அதையும் மீறி காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து பணத்தை பெறுவதற்குள் நாம் பட வேண்டிய கஷ்டங்களும் அதிகம், இதில் எனக்கு நேரடியாகவே அனுபவம் உண்டு.

தனியார் மருத்துவமனைகளைவிட அரசு மருத்துவமனைகளே அங்கு உயர்தரமான மருத்துவத்தை மக்களுக்கு அளிக்கின்றன. சுத்தமானதும் மற்றும் தரமானதுமான மருந்துகளுக்காக அரசு எடுக்கும் முயற்சிகள் அளப்பரியது. மருத்துவத்திற்காக வரும் நோயாளிகளுக்கு நம்பிக்கையை அளிக்கவேண்டியது மருத்துவமனைகளின் மிக முக்கியமான பொறுப்பாகும். இந்தவிஷயத்தில் அமெரிக்கர்கள் தவறுவதேயில்லை. நோயின் அனைத்து தன்மைகளும் நோயாளிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் மிக தெளிவாக எழுத்துவடிவமாகவே (Medical Document) அளிக்கப்படுகிறது. மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்த பின்பு தனது அவதானிப்புகளை ஒலி வடிவமாக சேகரித்து மருத்துவ பிரதியெடுக்கும் நிறுவனங்களுக்கு அனுப்புகிறார். ஒலி வடிவத்தில் மருத்துவர் என்ன பேசியிருக்கிறாரோ அதை அப்படியே தட்டச்சு செய்து மருத்துவ காப்பீட்டு நிறுவனத்திற்கும் அதே மருத்துவருக்கும் அந்த நிறுவனங்கள் அனுப்புகின்றன. பொதுவாக அந்த வேலை இந்தியாவிற்கே வருகிறது. காப்பீட்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைத்த தகவல் வடிவத்தை (Medical Reports) Medical Coding நிறுவனங்களுக்கு அனுப்புகின்றன (தற்பொழுது நான் வேலை செய்து வருவது Medical Coding நிறுவனத்தில் தான்). ஒவ்வோரு நோய்க்கும் ஒவ்வொரு எண்களை குறியீடுகளாக பயன்படுத்துகிறார்கள்.




உதாரணமாக நோயாளி உயர் ரத்த அழுத்ததிற்காக மருத்துவமனைக்கு வந்திருந்தால், அதற்கான குறியீட்டு எண் 401.9 என்பதாகும். 401.9 என்ற குறியீட்டிற்கு ஒரு குறிப்பிட்ட பண மதிப்பு உண்டு. ஒருவேளை 401.9 என்பதற்கு 5$ மதிப்பு என்று வைத்துக்கொண்டால், 5$ மருத்துவரின் கணக்கில் வரவு வைத்துக்கொள்ளப்படும். இதுவே ஒரு மருத்துவர் தனது சம்பளத்தை பெறும் முறையாகும். இவ்வாறாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான நோய்களுக்கு குறியீட்டு எண்களை பயன்படுத்துகிறார்கள். நோய்களுக்கு ஆங்கிலத்திலேயே பெயர் வைக்கிறார்கள். தொடர்ந்து அச்சொற்களை புழங்குவதின் மூலம் மக்களும் எளிமையாக அதை புரிந்துகொள்கின்றனர். நாம் எத்தனை நோய்களை தமிழிலேயே அழைக்கிறோம் என்று சிந்தனை செய்தால் சோர்வே மிஞ்சும். நாம் தமிழை வளர்ப்பவர், காப்பாற்றுபவர் என்று அழைக்கப்பட விரும்புகிறோம், ஆனால் அதற்காக உழைப்பை சிந்துவதில்லை. அதைவிட கொடுமை பெரும் தமிழ் உளைப்பாளிகளை மரியாதை செய்வதில்லை. (ஒரு மூத்த அரசியல்வாதியின் பிறந்தநாள் வாழ்த்தாக நம் முதலமைச்சர் சொல்கிறார், பிறந்தநாள் கொண்டாடும் தம் நண்பர் தமிழின் மணிமகுடம் என்று. அந்த நபர் தமிழுக்கு என்ன செய்தார் என்று யோசித்தால்...யோசிக்க வேண்டாம் என்பதே என் பரிந்துரை). ஒருவனுடய தாய் மொழியை வெறுமனே அவனுடைய உணர்ச்சியைத் தூண்டிவிட மட்டுமே பயன்படுத்துபவர்கள் அறிஞர்களாக போற்றப்படும் விந்தை தமிழில் சாதாரணம்.

வழிமுறைகள் மிகவும் எளிமையானது போல தோன்றினாலும், மருத்துவர்கள் இதிலும் ஊழல் செய்ய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கின்றன. எனவே அதைத் தடுப்பதற்கு கடுமையான சட்ட விதிமுறைகள் இருக்கின்றன. அனைத்து விஷயங்களும் வெளிப்படையாக இருப்பதால், தம் நோயின் தீவிரம் நோயாளிக்கு தெளிவாகத் தெரிந்துவிடுகிறது. பொய்யான மருத்துவம் செய்து நோயாளிகளிடம் மருத்துவமனைகள் ஒரு பைசா கூட வசூலிக்க முடியாது. ஒருவேளை தவறான அவதானிப்புகளை ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களுக்கு மருத்துவர் அளித்து பணம் வசூலிக்க நினைத்தால், ஆயுள் முழுவதையும் அவர் சிறையிலே கழிக்கவேண்டிய பாக்கியத்தை பெற நேரலாம். இத்தகைய சில விதிமுறைகளால் மிகப்பெரிய நன்மைகள் நோயாளிகளுக்கு இருக்கின்றன. தம் உடலில் எந்த பாகமும் அறுவை சிகிச்சை என்ற முறையில் திருடுபோக வாய்ப்பே இல்லை. தரமான சிகிச்சை கிடைக்கிறது. அதிக பணம் வசூலிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. மருத்துவரின் ஒவ்வொரு செயல்முறையும் எழுத்து வடிவில் நோயாளிக்கும் கிடைத்துவிடுவதால், தன் உடலைப் பற்றிய புரிதல் நோயாளிக்கு கிடைக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மருத்துவமனை பற்றிய பயம் நோயாளிக்கு அறவே இல்லாமல் போகிறது.

அனைத்து விஷயங்களையும் நாம் வெளிப்படையாக செய்யும் வழக்கம் இருந்தால், மருத்துவத்துறையில் மட்டுமல்ல இன்னும் பெருவாரியான பல துறைகளிலும் முன்னேற்றம் மிக எளிதாக சாத்தியம்தான். மருத்துவம் சம்பந்தமான நமது குறைபாடுகள் என்னென்ன?

1. சுத்தம் மற்றும் உடல் பற்றிய விழிப்புணர்வு மிகவும் குறைவு.

2. அரசு மருத்துவமனைகளின் நம்பமுடியாத அக்கறையின்மை. நான்கு அரசு மருத்துவமனைகளுக்கு ஒருவேளை யாரேனும் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், நம் சமூக நோயின் வீரியத்தை உணரமுடியும்.

3. மருத்துவர்களின் பணத்தாசை. இதற்கு நிரந்தர தீர்வு வழங்க அரசு இதுவரை எந்த திட்டமும் உருப்படியாக தீட்டவில்லை, அல்லது செயல்படுத்தவில்லை.

இதற்கு தீர்வுதான் என்ன?

1. சுகாதார மையங்கள் அக்கறையுடன் செயல்பட வேண்டும்.

2. மருத்துவ காப்பீட்டை அவசியமானதாக மாற்றவேண்டும்.

3. அதிகாரம் ஒரு இடத்தில் குவியாமல் வட்டாரமயமாக்கப்பட வேண்டும். இதன்மூலம் அரசு மருத்துவமனைகளில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் வட்டாரத்திற்குள்ளேயே அதை தீர்த்துக் கொள்ள முடியும்.

4. அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அவை ஒழுங்காக செயல்படுகின்றனவா என்று தீவிரமாக கவனிக்கப்படவேண்டும்.

5. மருத்துவர்கள் நோயாளிகளை கனிவுடன் நடத்துகிறார்களா என்று அறியப்பட வேண்டும் (அரசின் ஒவ்வொரு துறையிலுமே இது தேவைப்படுகிறது).

எனது சித்தப்பாவிற்கு சில வருடங்களுக்கு முன்பு தண்டுவடத்தில் வலி ஏற்பட்டது. Scan எடுப்பதற்காக ராயப்பேட்டை ESI மருத்துவமனைக்கு சென்றோம். நோயாளிகள் நோயினால் மட்டுமல்ல மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர்களால் கூட அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பதை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சீழ் வடியும் கையுடன் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனை எவ்வித சலனமும் இல்லாமல் மிக எளிதாக திட்டியபடியே கடந்து சென்ற மருத்துவரை அங்கு நான் கண்டேன். சுத்தமில்லை, எங்கெங்கு நோக்கினும் மருந்து நாற்றம், அளவுக்கதிகமான கூட்டம். இத்தகைய சூழலில் பணிபுரியும் மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் மனம் மறத்தவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அந்த சூழல் கொடுக்கும் அருவறுப்பே வெளிநாடுகளை நோக்கி நம் மருத்துவர்களை படையெடுக்கச் செய்கிறதோ என்று தோன்றியது. இச்சூழலிலிருந்து அவர்களுக்கும்தான் விடுதலை தேவை. இதனால் அரசு மருத்துவமனைகள் தரமானதாகவும், பரவலாகவும் அதேவேளையில் எண்ணிக்கையில் அதிகமாகவும் ஆக்கப்படவேண்டியது அவசியமாகிறது. 

No comments:

Post a Comment