Tuesday, March 2, 2010

கர்ண மோட்சம்

நம் நாட்டின் தொன்மையான கலைகளின் இன்றைய நிலையை, அக்கலையையே வாழ்கையின் அடிப்படையாக கொண்ட மக்களின் வாழ்வை, அருவருப்பான காட்சியமைப்புகள் கொண்ட சினிமா என்ற மீடியத்திடம் பலி கொடுத்திருக்கிறோம். நுட்பமான் விஷயங்களை தமிழர்கள் அவதானிப்பதில்லை; மாறாக, குரூரம் தடவப்பட்ட பொதுப்புத்திகளை வெற்றியும் பெற வைக்கிறார்கள் என்பதை சமீபத்திய திரைப்படங்களின் சாராம்சமும், தொலைகாட்சி நிகழ்ச்சிகளும், பத்திரிக்கைகளும் நிரூபிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை வைத்து வியாபாரமும் செய்து வருகின்றன.

கலையின் உண்மையான தேடல்கள் கொண்ட கலைஞர்களை நாம் ஓட ஓட துரத்துகிறோம் என்பதற்கு தமிழில் நூறு கலைஞர்களை காட்ட முடியும். இதற்கு முழு காரணமாக நான் கருதுவது தமிழர்களின் பொதுபுத்திதான். அதாவது, நேர்மையைவிட அதிகாரம் நமக்கு தரும் மயக்கம் அதிகமானது. இன்று அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அல்லது பெரும்பான்மையோருக்கு பிடித்தமானவர்களாக இருப்பவர்களுக்கு - ஒருவேளை அவர்களுடைய வெளிப்பாடு ஆபாசமானதாக இருந்தாலும் - கிடைக்கும் மரியாதையில் ஒரு துளி கூட உண்மையான ஒரு கலைஞனுக்கு கிடைப்பதில்லை.

கேளிக்கை சினிமாவின் ரசிகனாக இருந்த என்னை புத்தகங்களை நோக்கி திருப்பியவர் எஸ். ராமகிருஷ்ணன்தான். அவரது துணையெழுத்து தொடர் விகடனில் வெளிவந்த காலங்களில் அவரது ஒவ்வொரு கட்டுரையையும் பலமுறைகள் படிப்பவனாக இருந்தேன். நான் சென்னை வரும்போது பயணங்களில் என் துணையாக நான் அழைத்து வந்தது அவரது எழுத்துக்களைத்தான்.

சமீபத்தில் உயிர்மை சார்பாக நடந்த அவரது புத்தக வெளியீட்டு விழாவில் அவர் பேசிய பேச்சின் சாராம்சம் என்னை ஆழமாக சோர்வடைய செய்தது. தான் கேளிக்கை சினிமாவுக்குள் நுழைந்தது பற்றி குற்ற உணர்வு கொள்ளவில்லை; உண்மையான கலைஞனாக மட்டுமே தான் வாழ்ந்த காலங்களில், இந்த சமூகம் தனக்கு தந்தது வறுமை மட்டுந்தான், எனவே கொஞ்சம் சம்பாதிப்பதற்கு சினிமாவில் வேலை செய்தால் என்ன தவறு பேசினார். (அவர் சினிமாவில் எழுதும் வசனங்களின் அபத்தம் கேளிக்கை சினிமாவை விட மோசமானது என்பது மறுப்பதற்கில்லை). 

எஸ். ராவின்  கதையில் உருவான கர்ணமோட்சம் என்ற தேசிய விருது பெற்ற குறும்படத்தை இணையத்தில் இரண்டாவது முறையாக இன்று பார்த்தேன்.  ஒரு எளிய கூத்து கலைஞரின் வாழ்வின் நடக்கும் சிறு சம்பவத்தை பற்றிய கதை இது.  சைதாபேட்டை பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கர்ணன் கூத்து நடத்துவதற்காக; நேரமாகிவிட்டபடியால் சின்னமலையில் இறங்கி அங்கேயே ஒரு மைதானத்தில் வைத்து கர்ண வேஷம் போட்டுக்கொண்டு, கூடவே தன் மகனையும் அழைத்துக்கொண்டு அந்த கோவிந்தன் என்ற கூத்து கலைஞர் நடந்துவரும் முதல் காட்சியே தேர்ந்த நாட்டுபுற பாடல் கலந்த பின்னணி இசையுடன் நம்மை அந்த கலைஞரின் உலகத்திற்குள் அழைத்து செல்கிறது.

அவரது மகன் கதிர் கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டவன்.    கோவிந்தன் கதிரிடம், "கதிர் பசிக்குதாடா, ஏதாவது சாப்பிடுகிறாயா" என்று கேட்கும் போது அதை சட்டையே செய்யாமல் தனக்கு கிரிக்கெட் பேட், பால், வெள்ளை தொப்பி வேண்டும் என்று கேட்கிறான்.  கூத்து முடிந்தபின் தனக்கு  கிடைக்கும் பணத்தில் வாங்கித்தருவதாக கோவிந்தன் சொல்கிறார்.  இருவரும் கொஞ்சதூர நடைபயணத்தில் பள்ளியை அடைகிறார்கள். ஆனால் கூத்து நடக்கவிருந்த பள்ளியில் யாருமே இல்லாததை கண்டு கோவிந்தன் கலவரத்துடன் பள்ளியின் உட்புறம் செல்கிறார்.  அங்கே அந்த பள்ளியின் வாட்ச்மன் மட்டும் தனியாக அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.

கோவிந்தன்  அவரிடம் தான் வந்த விஷயத்தை கூறுகிறார்.  அதற்கு வாட்ச்மன் அந்த பள்ளியின் தாளாளர் இறந்து விட்டதாகவும், எனவே பள்ளி அன்றைய தினம் விடுமுறை என்றும் கூறுகிறார்.    மேலும் விபரம் தெரிய வேண்டும் என்றால் பள்ளியின் பிரின்சிபாலை தொடர்பு கொள் என்று கூறி பிரின்சிபாலின் நம்பரை கோவிந்தனிடம் கொடுக்கிறார்.  நம்பரை பெற்றுக்கொண்ட கோவிந்தன் ஒரு பப்ளிக் பூத்திலிருந்து பிரின்சிபாலுக்கு போன் செய்கிறார்.  போனில் பிரின்சிபால் கோவிந்தனிடம், "உங்களை அடுத்தமாதம் கண்டிப்பாக நிகழ்ச்சி நடத்த அழைக்கிறேன்" என்று கூறுகிறார்.  உடனே கோவிந்தன், தான் ஐம்பது ரூபாய் மட்டுமே கொண்டுவந்ததாக கூறவும், பிரிசிபால் தன் வீட்டுக்கு வந்தால் ஊர் செல்வதற்கு பணம் தருவதாக கூறுகிறார்.  கோவிந்தன் எப்போது வரவேண்டும் என்று கேட்டதற்கு தான் முட்டுக்காடு சென்றிருப்பதாகவும், வருவதற்கு ஏழு மணி ஆகும் என்றும் பிரின்சிபால் கூறுகிறார். 

பிரின்சிபாலின் வீடு மந்தைவெளியில் இருக்கவும், வாட்ச்மேனிடம் அட்ரஸ் வாங்கிகொண்டு  மந்தைவெளியை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்.   கதிர் மறுபடியும் கோவிந்தனிடம், எனக்கு கிரிக்கெட் பேட் வாங்கி தருகிறேன் என்று சொன்னாயே, இப்போது வாங்கிதா என்று அடம்பிடிக்க, கோவிந்தன் கோபத்தில், நானே ஏழுமணிவரை பணமில்லாமல் எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறேன், உனக்கு கிரிக்கெட் கேட்கிறதா என்று திட்டிக்கொண்டே கதிரை ஒரு பிளாட்பார ஹோட்டலுக்கு கூட்டிசெல்கிறார்.  இதனால் கோபமடையும் கதிர், கோவிந்தனை பார்த்து, பேசாமல் நான் ஊரிலயே கிரிக்கெட் விளையாடிக்கொன்ன்டிருந்திருப்பேன், பேட் வாங்கிதருகிறேன் என்று ஏமாற்றி என்னை கூட்டிவந்துவிட்டாயே, நீயெல்லாம் ஒரு கர்ணனா என்று திட்டுகிறான்.

பின்பு, இருவரும் பிளாட்பார சேரில் அமர்கிறார்கள்.  ஹோட்டல் காரனிடம் ஒருவர் காப்பி சரியில்லை என்று சண்டைபோட்டுக்கொண்டிருக்கிறார்.  அதற்கு ஹோட்டல் முதலாளி, நீ கொடுக்கிற ஒன்னாரூபாக்கு ஹார்லிக்ஸா கொடுக்கமுடியும் என்று கத்துகிறான்.  கோவிந்தனும் அதை ஆமோதித்தவாறே, நிஜந்தானே இந்தகாலத்தில் ஒன்னாருபைக்கு யார் காபி தருகிறார்கள் என்று கூறிக்கொண்டே இட்லி எவ்வளவு என்று கேட்கிறார்.  கடைக்காரர் 1.50 ரூபாய் என்று சொன்னவுடன் தன் பாக்கெட்டில் எவ்வளவு இருக்கிறது என்று பார்கிறார், வெறும் 20 ரூபாய் மட்டுமே இருக்கவும், ஒரே ஒரு வடை மட்டும் வாங்கி கதிருக்கு சாப்பிட தருகிறார்.  தனக்கு தண்ணீரே போதுமென்றெண்ணி, கடைக்காரரிடம் ஒரு டம்ளர் தண்ணீர் வாங்கி குடித்தபின், தாகம் அடங்காமல் இன்னும் ஒரு டம்ளர் தண்ணீர் கொடு என்று கேட்கிறார்.  அதற்கு கடைக்காரன், நீ வாங்கிய ஒரு வடைக்கு ரெண்டு டம்ளர் தண்ணியெல்லாம் தரமுடியாது, வேண்டுமென்றால் வாட்டர் பாக்கெட் வங்கி குடி, இல்லையென்றல் பைப்பில் போய் குடித்துக்கொள் என்கிறான்.

இதைஎல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அவனது கடையில் வேலை பார்க்கும் சிறுமி தன் கவனக்குறைவால், இட்லியை பாத்திரத்தில் எடுத்துவைக்கும் போது, கைதவறி கீழே போட்டுவிடுகிறாள்.  கடைக்காரன் அவளை ஓங்கி ஒரு அடி அடித்தவாறே அய்யோ பாவம் ஊமையாயிற்றே என்று வேலை கொடுத்தால் அலட்சியமாகவா இருக்கிறாய்.  ஒழுங்காய் இரு அல்லது பழையபடி ரயிலில் பிச்சைஎடுக்க போய்விடு என்று கண்டிக்கிறான்.

கோவிந்தன் எழுந்து நடந்து சென்று பக்கத்திலிருக்கும் டேங்கில் தண்ணீர் குடித்துவிட்டு அமர்ந்திருக்கும்போது, தண்ணீர் பிடிப்பதற்காக அந்த சிறுமி வருகிறாள்.  தன்முன்னே வந்து நிற்கும் அவளிடம் உன் பெயர் என்னம்மா என்று கோவிந்தன் கேட்கிறார்.  ஜானகி என்ற தன் பெயரை மண்ணில் எழுதி காட்டுகிறாள்.  மிக நல்ல பெயர் என்று அவர் பதில் சொல்லும்போது, உங்கள் பெயர் என்ன என்று ஜானகி சைகையாலே கேட்கிறாள்.  கோவிந்தன் அவளிடம், "என் பெயர் கோவிந்தன்; கூத்து தெரியுமா கூத்து, அதுல கர்ணவேஷம் கட்டுறவன்.  கர்ணன் யாரு தெரியுமா?, பாரத கதையில் வருவான்.  சிவாஜி கணேசன் கூட ஆக்டு குடுத்திருக்காரு.  கர்ணன் என்ன செய்வான் தெரியுமா, என்ன கேட்டாலும் தருவான்.  இந்த பூமிய ஒருத்தன் கேட்டானு வை, இந்தா வச்சிக்கோன்னு குடுத்துருவான்.  இந்த உசுர ஒருத்தன் கேட்டான்னு வையி, அதையும் தந்துருவான்.  கூத்துல அய்யாதான் கர்ணன்.  இப்படியே வந்து நின்னு ஒரு கிறுக்கிசுத்தி பாடினேன்னு வச்சுக்கோ, ஊர் மொத்த ஜனமே கைதட்டும்.   ம்ம்ம்... அதெல்லாம் ஒரு காலம்; இப்பல்லாம் எங்க கூத்து நடக்குது, டிவி பெட்டி வந்து எல்லாத்தையும் முழுங்கிடுச்சி.  உனக்கு கூத்து பிடிக்குமா?  உன் வயசுல நான் கூத்து கத்துக்கிட்டேன்.  வாத்தியார் யார் தெரியுமா செஞ்சி துரைசாமி தம்பிரான்.  காணிக்கை எல்லாம் வச்சி குடுத்து சேர்ந்தேன்.   அவரு வீட்டுலேயே வச்சு அலகு கத்துக்கணும்.... சொந்த பிள்ளை மாதிரி வச்சி பாத்துக்கிட்டாரு.  பதினைஞ்சி வருஷம் அவரு கூடவே இருந்தேன்.  அப்பெல்லாம் கூத்து தொடர்ந்து பதினெட்டு நாட்கள் நடக்கும்.  ஜனங்க ராத்திரி பூராவும்  முழிச்சிருந்து பாப்பாங்க.  இன்னிக்கு அந்த பாட்டெல்லாம் காத்தோட போச்சு.   எப்பேர்பட்ட கலை!.. எத்தனைபேர் உயிரைகொடுத்து காப்பாத்தினது.  இப்ப யாருமில்லாம போச்சு.  என் மனசு கேட்காம உன்கிட்ட சொல்லுகிறேன்.  உனக்கு புரியுதோ, புரியல்லையோ..... என் வேதனைய பகிர்ந்துக்க யார் இருக்காங்க?  (இந்த வசனங்களை கோவிந்தன் பேசும்போது அவர் கண்களில் காட்டும் வேதனையை எழுத்தில் கொண்டுவருவது, ஓர் புனைகதை எழுத்தாளனுக்கே கூட சாத்தியமில்லாததுதான்.  அளவைமீராத கச்சிதமான உரையாடலும், தேர்ந்த அவரது நடிப்பும், ஜானகியின் முகபாவங்களும், எவர் இதயத்தையும் தாக்கக்கூடிய வல்லமை கொண்டவை.  இதே கதை வசனத்தை எழுதிய கைகள் சண்டைகோழி போன்ற முட்டாள்தனமான படங்களுக்கு எழுதுவதை தாங்கும் குணம் எனக்கு இல்லை).

இதே நேரத்தில், கடைக்காரன் குச்சியுடன் அடிப்பதற்காக வருவதை கண்ட ஜானகியும் கிண்டந்தனும் வேதனையுடன் பிரிகிறார்கள்.   அவன் அவளை அடித்தவாறே, "போனோமா வந்தோமான்னு  இல்லாம கண்டவனோட என்ன பேச்சு" என்கிறான்.  அதை கோவிந்தன் வேதனையுடன் பார்க்கிறார்; கூத்தில் கர்ணனாக அவர் கொள்ளும் உக்கிரம் அவருக்கு ஞாபகம் வருகிறது.  அதை காட்சி படுத்திய விதம் அருமையானது.

ஆனால் தன் இயலாமையை எண்ணி அவர் வேதனையுடன் தலையை கவிழ்ந்தவாரே பெஞ்சில் அமர்ந்திருக்கும்போது, மறுபடியும் ஜானகி அவரிடத்தில்  வருகிறாள்.  நடுங்கிய குரலுடன் நிமிரிந்து அவளை பார்த்து, அந்த ஆள் உன்னை ரொம்ப அடிச்சானா?  என்று கேட்கிறார்.  தான் அவருக்காக மறைத்துவைத்து கொண்டுவந்திருந்த இட்லிகளை சாப்பிடுவதற்காக அவரிடத்தில் தருகிறாள்.  அதை கடைக்காரன் கவனித்துவிடுவானோ என்று பயந்தபடியே, கடைக்காரன் வரவில்லை என்று உருதிபடித்திக்கொண்ட பின்பு சோகம் ததும்பும் கண்களுடன் இரு கைகளையும் ஏந்தி அவளிடமிருந்து இட்லிகளை வாங்கிக்கொள்கிறார்.
 
அப்போது பின்னணி இசையாக ஒலிக்கும் நாட்டுபுற பாடலான “கேட்ட போருளளிக்கும் வரம் பெற்ற கர்ண ராஜன் நான்," கர்ண வேஷம் போடும் இன்றைய கூத்து கலைஞன் தானமாக பெற்று மறைவாய் உண்ண வேண்டிய அவலத்தை முகத்தில் அறைந்தாற்போல் சொல்லுகிறது.  சாப்பிட்டு முடித்தவுடன், கோவிந்தன் ஜானகிக்கு கூத்து கற்றுக்கொடுக்கிறார்.  முதலில் குருவணக்கம் கற்றுகொடுத்த பின்பு, தாம்தக்க தக்கத்திக்க தாம்தக்க தக்கத்தை... என்று கூத்தாடியபடியே அவளையும் ஆடச்சொல்கிறார்.
 
அவள் ஆடத்தொடங்கிய அடுத்த கணம், கடைக்காரன் கோபமாக வந்து அவள் முகத்தில் காப்பியை ஊற்றிவிட்டு, நாலு இட்லி வாங்க காசில்லாம தெருத்தெருவா சுத்திகிட்டு இருக்கிறாய், இதுல கூத்து கத்துகொடுத்து வேற இவள கெடுக்க போறியா?  போயா உன் வேலையை பார்த்துக்கிட்டு என்று அவளை கூட்டி சென்றுவிடுகிறான்.  வேதனை தோய்ந்த முகத்துடன் தலையை கவிழ்ந்து கொள்கிறார். அவரது பழைய நாடக காட்சி அவர் கண்முன் விரிகிறது. அதிலே, அவர் கர்ணனாக பேசும் வசனம் இதோ: ஹேய் காவலா, என்னிடம் யார் வந்து எந்த பொருளை கேட்டாலும், அந்த பொருளை இல்லை என்று சொல்லாமல், வாரி வாரி வழங்கி கொடை வள்ளல் என்று பெயர் பெற்றவன்.  என்னிடம் தானம் பெற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள் தெரியுமா?

"அஞ்சை பஞ்சைகள்  பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பாருங்கோ கீர்த்தி வடைத்தேன் 
தன கர்ணன் என்று"

பின்பு சோகமாக திரும்பி அவர் சென்றுகொண்டிருக்கும்போது, அவரை பார்த்த கதிர், “ஐயோ கூத்தாடி வந்துட்டார் என்று சொல்லிக்கொண்டே அவரை நோக்கி வருகிறான். அப்பொழுது பாத்திரம் துலக்கிகொண்டிருந்த ஜானகி, அதை பாதியிலே விட்டுவிட்டு, வேகமாக ஓடிவந்து மூச்சிரைத்தவாறே நின்று அவருக்காக தான் கொண்டு வந்த ஒரு ரூபாய் அணாவை கொடுக்கிறாள்.  அப்போது பின்னணியில் ஒலிக்கும் ஒரு மோசமான  (இது என் கருத்து) இசையை, உடனே அவள் குருவணக்கம் செய்யும்போது ஒலிக்கும் மனதை வருடும் இசை சீராக சமன் செய்கிறது.

ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு  திரும்பிப்பாராமல் அவள் ஓடுவதை கண்ணீர் மல்க கோவிந்தன் பார்த்துக்கொண்டே நிற்கிறார்.  பெருமதிப்புடைய வெகுமதியை (ஒரு உண்மையான கலைஞனுக்கு உண்மையான  ரசிகனிடமிருந்து  கிடைக்கும் பரிசைவிட உயரியது எது?) பெற்றுக்கொண்ட பெருமையுடன் பிரின்சிபாலின் வீட்டை நோக்கி நடக்கிறார். 

"அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
அஞ்சை பஞ்சைகள் பஞ்சம் பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பறந்தோட தானம் செய்தேன்
பாருங்கோ கீர்த்தி வடைத்தேன்
தன கர்ணன் என்று..."
என்ற நாட்டுபுற பாடலுடன் படம் முடிவடைகிறது.

உண்மையான கலை தவறான அதிகாரத்தை எதிர்ப்பது அல்லது அதற்கெதிரான தீவிர மௌனத்தை கோருவது. இதையும் இன்றைய சூழியலுக்கு எதிரான அழகியலாகவே நான் காண்கிறேன்.

இந்த குறும்படத்தில் சொல்லப்பட்டது ஒரு கதை மட்டுமல்ல. ஒவ்வொரு காட்சியிலும் உணர்த்தப்பட்டவை சமூகத்தின் இறுக்கங்களும், வேதனைகளும், சக மனித துவேசங்களும் தான். அனைத்து காட்சிகளுமே சமூக அவலம் அல்லது சமூக உன்னதங்களின் படிமங்கள் தான்.

காட்சி வாரியாக விவரிக்கும ஆவல் என்னிடம் உள்ளது, ஆனால் படத்தை பார்க்கும் ஒருவர் பெரும் அனுபவம் அதைவிட  அலாதியானது என்றே நான் கருதுகிறேன்.

இதை இயக்கிய முரளி மனோகரும், கோவிந்தனாக நடித்த ஜார்ஜும், கதிர், ஜானகி, மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் பாராட்டதாக்கவர்கள். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, Titling மற்றும் இன்னபிற  தொழில்நுட்பங்கள் பற்றி நான் பேசப்போவதில்லை.   அது ஒவ்வொருவரும் படம் பார்த்து அனுபவிக்கவேண்டியது.  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

http://www.youtube.com/watch?v=3W87_I79JKA
http://www.youtube.com/watch?v=PgcqGpl3OqM


http://www.sramakrishnan.com/view.asp?id=374&PS=1

1 comment:

  1. மிக அருமையான பதிவு.... இந்தக் கலையை காக்கும் எண்ணம் படைத்தவர்கள் அவரவர் வீட்டு நிகழ்வுகளுக்காவது இதுபோன்ற விழாக்களை பயன்படுத்தலாம்...

    ReplyDelete